இன்ப அதிர்ச்சி தரப்போகும் ஸ்டாலின் அரசு.. விரைவில் கூட்டுறவு கடன், நகைக் கடன் தள்ளுபடி- அமைச்சர்
தூத்துக்குடி: ஏழை எளியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளது ஸ்டாலின் அரசு. ஆம்.. கூட்டுறவு சங்க கடன்கள் மற்றும், நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில், வேளாண்மை கூட்டுறவு விற்பனைக் கடன் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று திறந்து வைத்தார்.
இதில் தூத்துக்குடி லோக்சபா எம்.பி. கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆத்தூரை புரட்டிப் போட்ட ஐ.பெரியசாமி.. 1.34 லட்ச வாக்குகள் வித்தியாசம் - எதிர் கேம்ப் டெபாசிட் காலி
கடன் கேட்பவர்கள்
இதில் ஐ பெரியசாமி பேசியதாவது- தமிழகத்திலுள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் கேட்பவர்களுக்கு எல்லாம் கடன் வழங்க வேண்டும். அதற்கான நிதியை தமிழக அரசு வழங்க ரெடி. தமிழகத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களை, அனைவரும் பயன்பெறும் வகையில் பல்நோக்கு மையமாக மாற்றுவதற்கான திட்டம் இருக்கிறது. அது விரைவில் கொண்டுவரப்படும்.
முறைகேடுகள் பற்றி விசாரணை
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்து வரும் 15ம் தேதிக்குள் அறிக்கை தர அனைத்து மாவட்ட இணைப்பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தெந்தப் பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைக்க வேண்டும், அதற்கான நிதி தேவை என்ன என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்துவருகிறது.
இலவச மின்சாரம்
இந்தியாவில் விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ய முடியாத நிலை இருந்தபோது, முதலமைச்சராக இருந்த கருணாநிதிதான், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தார். அப்போது நாடே, தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்தது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாயிகளின் முதுகெலும்பை நிமிரச் செய்தவர் கருணாநிதி.
விவசாய கடன், நகைக் கடன் தள்ளுபடி
தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவசாயக் கடன், கல்விக் கடன், கூட்டுறவுச் சங்கங்களில் வைத்துள்ள நகைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. விரைவில் அதைச் செய்வோம். சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் செய்யக்கூடிய அரசு திமுக அரசு.
பலதரப்பட்ட கடன்கள்
கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகள் நகைக் கடன் மட்டுமின்றி அனைத்து வகையான கடன்களும் வழங்க வேண்டுமெனவும் இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டுமென முதல்வர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஐ.பெரியசாமி அறிவித்தார்.
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்
தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தபடி பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பஸ் பயணம், ஆவின் பால் விலை குறைப்பு போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நகைக் கடன், கூட்டுறவு சங்க விவசாயக் கடன் போன்றவற்றை தள்ளுபடி செய்வது மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது, குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பது, ஆகியவை நிறைவேற்றப்பட உள்ள முக்கிய கோரிக்கையாகும். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக இதை அரசு செய்துவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.