“அக்னிபாத் புரட்சிகரமான திட்டம்” தப்பா புரிஞ்சிக்கிட்டு கொளுத்துறாங்க.. தமிழக ஆளுநர் பரபர பேச்சு!
தூத்துக்குடி : அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார்.
சிறப்பான அக்னிபாத் திட்டத்தை தவறாக புரிந்துகொண்டு இளைஞர்கள் அரசு பொருட்களை சேதப்படுத்துகின்றனர் என தமிழக ஆளுநர் பேசியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
17 வயது மாணவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
2 நாள் சுற்றுப்பயணம்
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2 நாள் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி வந்தடைந்தார். தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த தமிழக ஆளுநரை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
வ.உ.சி பிறந்தநாள் விழா
பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு நடைபெற்ற வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அக்னிபாத் திட்டத்தை வரவேற்றுப் பேசியுள்ளார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தை வரவேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அக்னிபாத் புரட்சிகரமான திட்டம்
இந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "அக்னிபாத் திட்டம் புரட்சிகரமான திட்டம். 17 வயது மாணவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வருமானத்துடன் நல்ல பயனளிக்கும் திட்டம் அக்னிபாத். சிறப்பான அக்னிபாத் திட்டத்தை தவறாக புரிந்துகொண்டு இளைஞர்கள் அரசு பொருட்களை சேதப்படுத்துகின்றனர்" எனப் பேசியுள்ளார்.
ஆளுநர் வரவேற்பு
மேலும் பேசிய அவர், "அக்னிபாத் திட்டத்தில் சேருவோருக்கு 4 ஆண்டு முடிவில் ரூ.12 லட்சம் கொடுக்கப்படுகிறது. 21 வயதில் இளைஞர்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த இத்திட்டம் உதவும். திட்டத்தில் பணியாற்றி வெளியே வருபவர்களுக்கு அரசிலும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். இளைஞர்களின் தன்னம்பிக்கையையும், சுய ஒழுக்கத்தையும் இந்தத் திட்டம் மேம்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.
பரபரப்பு
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பல ரயில் நிலையங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தி வரும் நிலையில், தமிழக ஆளுநர் வரவேற்றுப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.