சோபியா விவகாரம்.. ஒன்றரை மாதங்களுக்கு பிறகு தமிழிசைக்கு சிக்கல்!
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து மாணவி சோபியாவை மிரட்டியதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணிசாமி, மனோகரி தம்பதியின் மகள் லூயிஸ் சோபியா. கனடா நாட்டில் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வந்தார்.
சோபியா கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்டிகோ விமானத்தில் வருகை தந்தார். அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் பயணித்தார்.

ஒழிக கோஷம்
தூத்துக்குடி விமான நிலையத்தில், விமானத்திலிருந்து இறங்கக்கூடிய நேரத்தில், தமிழிசையை பார்த்து 'பாசிச பாஜக ஒழிக' என்று சோபியா குரலெழுப்பினார். இதனால் விமானத்திற்குள் பரபரப்பு சூழல் ஏற்பட்டது. இருவருக்கும் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து விமானத்திலிருந்து கீழே இறங்கிய பிறகு தனது ஆதரவாளர்களிடம் நடந்த சம்பவம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தாராம். இதையடுத்து ஆதரவாளர்களும், தமிழிசையும் சோபியாவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சோபியா கைது
இது தொடர்பாக தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன்பிறகு நீதிமன்றத்தை சோபியா தரப்பு அணுகியதால், அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது. இதனிடையே சோபியாவின் தந்தை அந்தோணி சாமி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகளை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தமிழிசை உட்பட பாஜகவினர் 10 பேர் மீது குற்றம் சுமத்தினார்.

தமிழிசை மீது வழக்கு இல்லை
ஆனால் போலீசார் தமிழிசை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் கோபமடைந்த அந்தோணிசாமி தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், தமிழிசை மற்றும் அவர் ஆதரவாளர்கள் மீது, வழிமறித்து அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் மற்றும் பெண்கள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடி நீதிமன்றம்
இந்த வழக்கு நேற்று நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழிசை மற்றும் பாஜக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நவம்பர் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

புகார் வாபஸ் பெற கோரிக்கை
இதையடுத்து காவல் துறையின் விசாரணை வளையத்திற்குள் தமிழிசை சிக்கியுள்ளார். சோபியா மீதான புகாரை வாபஸ் பெற்றால், நாங்களும் அவர் மீதான புகாரை வாபஸ் பெற தயார் என்று சோபியா வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் இதுவரை தமிழிசை சார்பில் புகார் வாபஸ் பெறாத நிலையில் இப்போது தமிழிசைக்கு அதுவே சிக்கலாக மாறி உள்ளது












Click it and Unblock the Notifications