நான் சொல்றதை செய்வியா? **** சாதிதான் இருக்கு! மாணவனிடம் நஞ்சை விதைத்த ஆசிரியை.. லீக்கான ஷாக் ஆடியோ!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவரிடம் ஆசிரியை கலைச்செல்வி சாதி ரீதியாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
அந்த ஆடியோவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொறுப்பு குறிப்பிட்ட சாதியினருக்கு செல்லக்கூடாது என ஆசிரியை கலைச்செல்வி பள்ளியில் படிக்கும் மாணவரிடம் பேசி உள்ளார். குறிப்பிட்ட ஜாதியினர் பதவிகளுக்கு வந்துவிட கூடாது. அதனால் உன்னுடைய ஜாதியை சேர்ந்த ஊர் காரர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வா என்று அந்த மாணவரை ஆசிரியர் தூண்டும் விதமாக பேசி இருக்கிறார்.
அதாவது தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பு செல்ல கூடாது. நம்ம ஜாதிதான் இருக்கணும் என்று மாணவர் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் அந்த பெண் ஆசிரியர் பேசி உள்ளார். இதற்கு அந்த மாணவர் சொன்ன பதில்தான் வைரலாகி வருகிறது.
ஆடியோ வெளியானது
மாணவரின் சாதியை சேர்ந்தவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ஆசிரியை பேசுவதும் ஆடியோவில் பதிவாகியுள்ளது. சாதி ரீதியாக பேசிய ஆசிரியை கலைச்செல்வி மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த கலைச்செல்வி என்று அந்த ஆசிரியர் (துணை தலைமை ஆசிரியர்) மாணவர் ஒருவரிடம் பேசி உள்ளார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.
நீ எந்த சாதி?
அதில்..
ஆசிரியர்: நீ புளியங்குளம் தானே? நீ "****" சாதியா? நான் ஒன்னும் சொல்லுவேன்.. எனக்கு ஹெல்ப் பண்ணுவியா? ஒன்னும் இல்லைடா.
ஆசிரியர்: உனக்கு பால் ராஜ் சார். நம்ம பிடி சார் எல்லாம் பிடிக்குமா?
மாணவர்: பிடிக்கும் டீச்சர்
ஆசிரியர்: பிடிக்குமா அப்படியா? என்னை எல்லாம் பிடிக்காதா?
மாணவர்: எல்லாரையும் பிடிக்கும் டீச்சர்
ஆசிரியர்: நான் சொன்னதை நீ செய்வியானு தெரியலையே.. நான் சொன்ன யாரையும் எனக்கு பிடிக்காது. நீ பிடிக்கும்னுல சொல்ற.
மாணவர்: எல்லாரையும் பிடிக்கும் டீச்சர்.
நீ நான் சொல்றதை செய்வியா?
ஆசிரியர்: நான் சொன்னதை செய்வியானு தெரியலையே.. உன்கிட்ட எதுவும் சொல்ல முடியாதே. எனக்குதான் அவங்க யாரையும் பிடிக்காது . நீ நான் உன்கிட்ட பேசுனேன் என்பதை யாரிடமும் சொல்ல கூடாது.
மாணவர்: நான் சொல்ல மாட்டேன். நீங்கதான் எதுவும் என்கிட்ட சொல்லலியே?
ஆசிரியர்: சரி நான் சொல்றேன். அதுக்கு அப்பறம் நீ யார் கிட்டயும் சொல்ல கூடாது. செய்ய மாட்டேன் என்று சொல்ல கூடாது.
மாணவர்: சரி சொல்லுங்க.
ஆசிரியர்: உன் கிளாஸில் உள்ளே எல்லோரும் பால்ராஜ் உள்ளிட்ட சார்களை பிடிக்குமா? உங்க வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்குமா?
மாணவர்: பிடிக்கும்னு எங்க வீட்டில சொல்லுவாங்க
அவங்க சாதி பத்தி பேசுவாங்க
ஆசிரியர்: இல்லைப்பா.. நான் ஏ.எச்.எம் தானே. பள்ளியில் புளியங்குளம் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்று அந்த ஆசிரியர்கள் கூறினார்கள். இப்போ அட்மிஷன் வருதுல்ல.. புளியங்குளம் பிள்ளையங்களுக்கு சீட் கொடுக்க கூடாது என்று சொல்கிறார்கள்., அதனால்தான் ஏன் புளியங்குளம் பிள்ளையங்க மீது இவங்களுக்கு என்ன கோவம் என்று தெரிந்து கொள்ள கேட்டேன்.
மாணவர்: நான் புளியங்குளம்தான்.. எனக்கு எல்லாம் செல்வகுமார் சார்தான் அட்மிஷன் போட்டாரு. பிரச்சனை இல்லையே. நான் கேள்வி பட்ட வரை எல்லோரும் நல்ல சார்தான். நாங்கள் எதுவும் செய்யலையே.
ஆசிரியர்: புளியங்குளம் பற்றிதான் அவர்கள் பேசுவார்கள். அதுவும் "****" சாதி பற்றிதான் பேசுவார்கள். நம்ம பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் நடக்க போகுது. உங்க ஊர் ஆட்களை வந்து கலந்து கொள்ள சொல்லு. ஒரு சார்பான கும்பல் கையில் பள்ளி இருக்க கூடாது. பள்ளியில் உன் "****" சாதியையும், என் "****" சாதியையும் மெஜாரிட்டி இருக்கு. ஆனால் இப்போ எஸ். சி கையில ஸ்கூல் போயிட கூடாது. சரியா?
மாணவர்: எல்லோரும் சமம் தானே டீச்சர்.
எல்லோரும் சமம்தான்
ஆசிரியர்: ஓ அப்படி சொல்றியா நீ.. நல்ல பையன் மாதிரி பேசுறியே. அவங்க இருந்தா புளியங்குளம் மாணவர்களுக்கு சீட் கிடைக்காதே.. என்ன பண்ண போற?
மாணவர்: அவங்களுக்கு மட்டும் சீட் கொடுப்பாங்கன்னு சொல்றீங்களா?
ஆசிரியர்: ஆமாம்.. உங்க ஊரில் இருந்து ஆட்களை கொண்டு வந்து பெற்றோர் - ஆசிரியர் கழகத்தில் சேர்த்து விடுங்க. பசங்க நோட்டிஸ் கொண்டு வருவாங்க.. உங்க வீட்டில் இருந்து வந்து பேச சொல்லுங்க! நான் ஜாதி பார்க்க மாட்டேன்.. ஆனால் சூழ்நிலை சரி இல்லை. அதை விட கூடாது என்று அந்த ஆசிரியர் பேசியது சர்ச்சையாகி வருகிறது.
நடவடிக்கை
இந்த நிலையில் மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில், கலைச்செல்வி மற்றும் மீனா ஆகிய இரு ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் கலைச்செல்விதான் அந்த மாணவரிடம் ஜாதி ரீதியாக பேசினார். இது போக மீனா அவருக்கு உடந்தையாக இருந்தார். இதனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.