தண்டவாளத்துல தலை வைக்கிறவங்க.. ரூ10 சீப்புல தலை சீவுவோம்..'தாத்தா' போல உ.பி அகோரிக்கு உதயநிதி பதிலடி
தூத்துக்குடி: ரூ10 சீப்பு இருந்தால் போதுமே.. நான் என் தலையை சீவுவேனே என சனாதன விவகாரத்தில் தமது தலையை வெட்ட சொன்ன உத்தரப்பிரதேச சாமியாருக்க் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என சென்னை மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். ஆனால் வட இந்திய பாஜகவினரோ, சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிறவர்களை இனப்படுகொலை செய்ய சொன்னார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என பொய் பிரசாரம் செய்துவிட்டனர்.

இதனடிப்படையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் வரிந்து கட்டிக் கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக உத்தரப்பிரதேச அகோரி சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா ஒரு கொடூர அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி வந்தால் ரூ10 கோடி பரிசு தருவேன் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரத்தில் உத்தரப்பிரதேச சாமியாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சனாதனத்தை பற்றி பேசியதற்காக உத்தர பிரதசேத்தில் ஒரு சாமியார் - பெயர் பரமஹன்ஸ ஆச்சார்யா - என் தலையை சீவினால் 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்துள்ளார்.

10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், நானே என் தலையை சீவிக்கொள்வேன்.
இதெல்லாம் எங்களுக்கு புதிதல்ல. இப்படித்தான் ஒரு வடநாட்டுச் சாமியார் கருணாநிதியின் தலையை சீவினால் ரூ1 கோடி என்று விலை வைத்தார்.
நானே என் தலையை சீவிக்கொள்ள முடியவில்லை. அவர் வந்து எப்படி சீவுவார் என்று கருணாநிதி கேட்டார்.
ஆகவே, இந்த மிரட்டுலுக்கெல்லாம் பயப்படுகிறவர்கள் நாங்கள் இல்லை. தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கருணாநிதி பேரன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் பயப்பட மாட்டேன். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications