வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் 200 பேருக்கு கொரோனா உறுதி
வேலூர்: வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிரா, டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,000-த்தை தாண்டி உள்ளது. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. மேலும் இரவு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. இக்கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைவதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் பின்னர் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக இணையம் மூலம் முன்பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வேலூர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 315 பேருக்கு கொரோனா உறுதியானது. தற்போது வேலூர் சி.எம்.சி. மருத்துவ பணியாளர்களுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மருத்துவமனையில் மட்டும் சுமார் 10,000 பேர் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications