பார் ஆன பால்வாடி..சரக்குடன் ‘ஆவேஷம்’ ரீல்ஸ்! ரூ.10 ஃபைன்.. திமுக பிரமுகரின் மகனுக்கு பயங்கர தண்டனை.!
வேலூர்: வேலூர் அருகே அங்கன்வாடி மையத்தை பார் போல மாற்றி திமுக பிரமுகர் மகன் ரிலீஸ் போட்ட விவகாரத்தில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 10 ரூபாய் அபராதம் விதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பது பலத்த விமர்சனங்களை பெற்றிருக்கிறது
சமூக வலைதளங்கள் வந்துவிட்டது போதும் ரீல்ஸ் மோகம் அனைவரையும் ஆட்டி படைக்கிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை செல்போனும் கையுமாகத்தான் அலைகின்றனர்.

குறிப்பாக இளைஞர்கள் ரீல்ஸ் போட்டு சிக்கலில் சிக்கிக் கொள்வதும் அதிகரித்து வந்திருக்கிறது. இருசக்கர வாகனங்களில் ஸ்டன்ட் செய்வது பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவது மது குடிப்பது போல ரீல்ஸ் விடுவது என ரீல் போட்டு காவல்துறையில் சிக்கி சின்னாபின்னமான சம்பவங்கள் ஏராளமாக நடந்திருக்கிறது.
அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகரின் மகன் சிக்கியுள்ளது அதற்கு காவல்துறை போட்ட வழக்கும் தான் விவகாரத்தை மேலும் பெரிதாகியிருக்கிறது. வேலூர் அலமேலுமங்காபுரம் அருகேயுள்ள வெங்கட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் பயிலும் வகையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையம் தான் தற்போது சர்ச்சைகளுக்கு மையப்புள்ளியாக அமைந்திருக்கிறது.
ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் இந்த அங்கன்வாடி மையத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் பாராக மாற்றி இருக்கின்றனர். திரைப்படங்களில் வருவது போல ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என மது புகையுடன் கொண்டாடி அவர்கள் அதனை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தனர். இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் டானுக்கு எல்லாம் டான் நான் தான் என்பது போல நடுவில் அமர்ந்திருந்து மாஸ் காட்டி இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏழை குழந்தைகள் பாதுகாப்பாகவும் ஒருவேளை உணவாவது அருந்த வேண்டும் என அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை பாராக மாற்றி இது போன்ற சமூக விரத செயல்கள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். மேலும் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
வீடியோவை வைத்து விசாரித்த போது அந்த வீடியோவில் இருந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பதும் அவரது தந்தை வேலூர் திமுக ஒன்றிய செயலாளர் என்பதோடு ஊராட்சி மன்ற தலைவராகவும் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அரசு கட்டடத்தை பயன்படுத்தி தவறாக வீடியோ போட்டதோடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அங்கன்வாடி மையத்தில் மது குடித்து பிரபல ரவுடி போல ரீல்ஸ் போட்ட சரண் உள்ளிட்டவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆவேஷம் படத்தை பார்த்து அதேபோல ரீல்ஸ் போட வேண்டும் என நினைத்ததாகவும் அதற்காக ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அங்கன்வாடி மையத்தில் வீடியோ போட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் பட்டாக்கத்திகளுடன் அவர்கள் வீடியோ போட்டது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்தனர் இந்த நிலையில் திமுக ஒன்றிய செயலாளர் மகன் சரண் உள்ளிட்ட இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது மது போதையில் பொது இடத்தில் தவறாக நடந்து கொள்ளுதல் குற்றத்திற்காக பத்து ரூபாய், 200 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் ஐபிடி 510, ஐபிசி 290, ஐபிசி 448 ஆகிய சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் போடும் இளைஞர்களை மன்னிப்பு கேட்க வைத்து சிறையில் அடைக்கும் காவல்துறை, திமுக பிரமுகரின் மகன் என்றால் பத்து ரூபாய் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வார்களா என கேட்டுள்ள பொதுமக்கள், இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications