கல்யாண டார்ச்சர்.. கலெக்டரிடமே போன பிளஸ் 2 மாணவி.. மிரண்டு போன தாய்.. பாய்ந்த ஆக்ஷன்
கல்யாணம் செய்து கொள்ளுமாறு கடந்த 3 ஆண்டுகளாக பெற்ற தாயார் தன்னை கட்டாயப்படுத்தி வருவதாக, பிளஸ் 2 மாணவி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார்.
ராணிப்பேட்டை: 32 வயது நபரை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கடந்த 3 ஆண்டுகளாக பெற்ற தாயார் தன்னை கட்டாயப்படுத்தி வருவதாக, பிளஸ் 2 மாணவி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து உடனே ஆக்சன் எடுத்த கலெக்டர், மாணவியை காப்பகத்தில் சேர்க்கவும் அங்கிருந்து பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவும் உத்தரவிட்டார். சிறுமியின் தாயாருக்கு உரிய ஆலோசனை வழங்கவும் கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.
பெண்கள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்பதே அரசின் இலக்காக உள்ளது. அதற்காக அரசு பள்ளி மாணவிகள், கல்லூரியில் சேர்ந்து படித்தால், மாதம் ஆயிரம் தரும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் பெண்களை பிளஸ் 2 அல்லது 10ம் வகுப்பிற்கு பின் கல்வி கற்க அனுப்பாமல் இருப்பதும், சிறுவயதிலேயே கல்யாணம் செய்து வைக்க விரும்புவதும் தொடரத்தான் செய்கிறது.
சிறுவயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், வெளி உலகத்தை புரிந்து கொள்வதற்குள், குழந்தைகள், பொறுப்புகள் என கடுமையான நிர்பந்ததத்தை எதிர்கொள்கிறார்கள். பல பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் இருண்டு போகிறது. அத்துடன் சிறு வயதிலேயே திருமணம் செய்வதால் கர்ப்பம் தரிப்பதால் இளம் வயதில் மரணங்களும் ஏற்படுகின்றன. அதனால் தான் அரசு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் திருமணத்தை தடுக்க கடுமையான சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

கலெக்டரிடம் புகார்
இந்நிலையில் பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் அவரது தாயார் மூன்று ஆண்டுகளாக திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை ஒருகட்டம் வரை பொறுத்துக்கொண்ட மாணவி, கடைசியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கே வந்து கலெக்டரிடமே புகார் அளித்தார், கலெக்டர் வளர்மதியிடம் அந்த பெண் அளித்த புகார் மனுவில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பெரும் புலிபாக்கத்தைச் சேர்ந்த மாணவி நான் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறேன்.

அக்கா விபரீத முடிவு
கடந்த 3 ஆண்டுகளாக எனது தாயார், நரசிம்மன் (32) என்பவரை திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறார். ஏற்கெனவே, எனது 2-வது அக்காவை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததால் தான், என் அக்கா 2019-ம் ஆண்டு விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில், என்னையும் எனது தாயார் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்.

கலெக்டர் அதிரடி
ஆனால் நான் படிக்க விரும்புகிறேன். திருமணத்திற்கு, பல முறை மறுப்பு தெரிவித்துவிட்டேன். ஆனால் என் தாயார் கேட்பதாக இல்லை. இனி என் வீட்டுக்கே நான் செல்ல விரும்ப வில்லை. எனது தாயாரிடம் இருந்து உரிய பாதுகாப்பு தாருங்கள் என்று மனுவில் பிளஸ் 2 மாணவி தெரிவித்திருந்தார். மனுவை உடனே விசாரித்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மாணவியை காப்பகத்தில் சேர்க்குமாறு சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காப்பகத்தில் மாணவி
இதையடுத்து சிறுமியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அன்னை சத்யா காப்பகத்தில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், சிறுமியின் தாயாருக்கு உரிய ஆலோசனை வழங்க முடிவு செய்தனர். சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியாளர் நிஷா ஆகியோர் இந்த நடவடிக்கையை கலெக்டரின் உத்தரவின் பேரில் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications