வேலூரில் பாய்ந்த வெள்ளம்.. பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட சாலை! கிராம மக்கள் கோரிக்கை
வேலூர்: கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது.
தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது மே மாதம் இறுதியிலும், ஜூன் மாதம் 1ம் தேதியும் தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த மழையால் முதலில் பயன்பெறும் மாநிலம் கேரளம்தான். அதன் பின்னர்தான் தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும்.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவிகிதமும், அதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் பருவமழை 65 சதவிகிதம் என மொத்தமாக இந்த முறை பருவமழை 45 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதேபோல கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவிலும் பருவமழை குறைந்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான நீர் வரத்து குறைந்தது.
இருப்பினும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியிருந்தது. அதேபோல இந்த மாதம் தொடக்கம் முதல் பருவமழையின் அளவு அதிகமாக இருந்தது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தமிழக ஆந்திர எல்லை பகுதியில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக திம்மம்பேட்டை, ஆவாரங்குப்பம், ராமநாயக்கன் பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி உள்ளிட்ட பகுதிகளின் வழியாக ஓடும் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர அரசு பாலாற்றில் ஏற்கெனவே 33 கி.மீ தொலைவில் 23க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டி இருக்கிறது. எனவே பருவமழை காலங்களிலும் பாலாற்றில் தண்ணீர் வருவது அரிதாக இருக்கிறது. இருப்பினும் தற்போது தடுப்பணைகளை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இந்த வெள்ளம் காரணமாக வேலூர் மாவட்டத்தின் அகரம்சேரி- மேல்ஆலத்தூர் இடையே பாலாற்றில் இரு கரைகளுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலையானது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதனால் மேல்ஆலத்தூர் மக்கள் சுமார் 15 கி.மீ தொலைவு சுற்றி பயணிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "இந்த தற்காலிக மண்சாலையை நாங்கள்தான் அமைத்தோம். நிரந்தரமாக பாலம் அமைத்து தர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் தற்போது வரை அதிகாரிகள் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தற்காலிக சாலை இருந்தால் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு செல்ல 1 கி.மீ தூரம் பயணித்தால் போதுமானது. ஆனால், இந்த சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டதால் அகரம்சேரியிலிருந்து மேல்ஆலத்தூர் வர 15 கி.மீ பயணிக்க வேண்டியுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக பாலம் அமைத்து தர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications