நேராக வந்த லாரி.. குறுக்கே வந்த சரக்கு வண்டி, ஆம்பூரில் அநியாயமாக போன பெண் போலீஸ் ஏட்டு உயிர்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் போலீஸ் ஏட்டு லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கணவர் கண் முன்னே நடந்த இந்த சம்பவம் ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்துகள் சில நொடிகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.. யாரோ சிலரின் கவனக்குறைவு பிரியமானவர்களின் உயிரையே பறித்துவிடுகிறது. அதுவும் அவர்கள் கண் முன்னே நடக்கும் அந்த சம்பவங்கள் ஆறாத வலியை ஏற்படுத்திவிடுகிறது.. கணவன் கண் முன்னே மனைவி உயிரிழப்பது என்பது உலகில் மிக கொடுமையானது. அந்த சம்பவம் ஆம்பூரில் நடந்துள்ளது..

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருடைய மனைவி பரிமளா (வயது 35). பரிமளா ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று ஆம்பூரில் இருந்து அகரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் தனது கணவருடன் பரிமளா சென்று கொண்டிருந்தார்.
இருசக்கர வாகனத்தை தட்சிணாமூர்த்தி ஓட்டினார். மாதனூர் - ஒடுகத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென குறுக்கே சரக்கு ஆட்டோ வந்திருக்கிறது. இதனால் தட்சிணாமூர்த்தி இருசக்கர வாகனத்துடன் நிலைதடுமாறினார். இதில் ஏட்டு பரிமளா சாலையின் வலது புறம் சாய்ந்துள்ளார்.
அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரி பரிமளா மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிமளா பரிதாபமாக உயிரிழந்தார். அதேநேரம் அதிர்ஷ்டவசமாக தட்சிணாமூர்த்தி உயிர்த் தப்பினார். நொடியில் நடந்த இந்த விபத்தை பார்த்து தட்சணா மூர்த்தி கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த பார்த்தனர். அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார், ஏட்டு பரிமளா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சரக்கு ஆட்டோ மற்றும் லாரி டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்ட போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட்ஜான் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிமளா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications