பெட்ரூமில் ரூ.2 கோடி.. வசமாய் சிக்கிய பெண் அதிகாரிக்கு "புரமோஷன்".. திமுக மீது பாயும் டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் திமுக அரசை விமர்சித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
வேலூர்: லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.2.27 கோடி பணம் மற்றும் நகைகளுடன் சிக்கி, கைது செய்யப்பட்ட பொதுப்பணித் துறை பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ஷோபனா... 57 வயதாகிறது.. வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரிபவர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக், என்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான டெண்டர் விடுவது, நிதி ஒதுக்கீடு செய்வது பணிகளை ஆய்வு செய்வதுதான் இவரது முக்கியபணி.

அதிகாரி
இந்த நிலையில், ஒருவரிடமிருந்து இவர் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கி இருந்ததால், கையும் களவுமாக ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் பிடிப்பட்டார்... இதற்கு பிறகு, தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஷோபனா தங்கியுள்ள ரூமிலும் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக ரூ.15 லட்சத்து 85 ஆயிரத்தையும், ரூ.3.92 லட்சத்திற்கான காசோலைகளையும், 17 டாக்குமெண்ட்களையும் பறிமுதல் செய்தனர். ஷோபனாவின் வீடு ஓசூர் நேருநகர் பகுதியில் இருப்பதால், அங்கும் சென்று சோதனை நடத்தினர்..

பறிமுதல்
இவரது படுக்கை அறையில் இருந்து 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கட்டுக்கள் இருந்துள்ளன..
மொத்தம் 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் இருந்துள்ளது.. இதில் கணக்கில் வராத 2 கோடியே, 7 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்ததாகவும், இதைதவிர, 38 சவரன் தங்க நகைகள், 11 வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கர் சாவி, ஒரு கிலோ 320 கிராம் வெள்ளி மற்றும் 13 சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஊழல்தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, அது தொடர்பான விசாரணையை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டு வந்தது.

விசாரணை
ஒரு பெண் அதிகாரியிடம் ரூ.2 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் நகை உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 11 வங்கிக்கணக்குகளை போலீசார் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது.. இந்த சூழலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஷோபனா பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.. அத்துடன் அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

தினகரன்
திருச்சி மண்டல பொதுப்பணித்துறையில் கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக அவர் பதவி உயர்வு பெற்றார். இது அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... விவாதங்களையும் உண்டு பண்ணி வருகிறது.. இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

விடியல் அரசு
தன்னுடைய ட்வீட்டில், "லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.2.27 கோடி பணம் மற்றும் நகைகளுடன் சிக்கி, கைது செய்யப்பட்ட பொதுப்பணித் துறை பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. தி.மு.க ஆட்சியில் லஞ்ச, ஊழல் எந்த அளவிற்கு புரையோடியிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கியவருக்கு ஒரு மாதத்திற்குள்ளாகவே பதவி உயர்வு கொடுத்து புதிய உலக சாதனை(?!) புரிந்திருக்கிறது விடியல் அரசு. தி.மு.க.வின் வழக்கப்படி ஊழலில் அவர்கள் செய்யப் போகும் இத்தகைய சாதனைகள் இனி ஒவ்வொன்றாக வெளிவரலாம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications