வேலூர் எஸ்.பி அலுவலகம் எதிரே திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. டிரைவர் ஒரே ஓட்டம்.. வேலூரில் பதற்றம்!
வேலூர் : வேலூர் எஸ்.பி அலுவலகம் எதிரே இன்று திடீரென கார் ஒன்று தீப்பற்றி மளமளவென எரிந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் எஸ்.பி அலுவலகம் எதிரே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீ பற்றியது. சுதாரித்த கார் ஓட்டுநர், உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதைய்ச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அருண்குமாரின் மனைவி வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்காக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை அருண்குமாரின் மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அவரை அழைத்து வருவதற்காக அருண்குமார், காரில் புறப்பட்டுள்ளார். அப்போது திடீரென என்ஜினில் இருந்து புகை வந்ததால் காரில் இருந்து இறங்கியுள்ளார்.
அப்போது புகை நெருப்பாக மாறி காரில் மளமளவென பற்றத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன அருண்குமார் காரை விட்டு அகன்று சென்றார். கார் மளமளவென பற்றி எரிந்ததில் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமானது.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் 20 நிமிடங்கள் போராடி காரில் கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். கார் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications