செல்போன் மிஸ் ஆகிட்டா? ஒரு HI போதும்.. வேலூர் போலீஸ் அறிமுகம் செய்த "மாஸ் திட்டம்" எப்படி இயங்கும்?
வேலூர்: தொலைந்து போன அல்லது திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்க வேலூர் மாவட்ட போலீசார் அசத்தலான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இது குறித்த விவரத்தை இங்கே விரிவாக பார்ப்போம்.
மக்களிடையே செல்போன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து விட்டது. வீட்டுக்கு ஒரு போனையே காண்பது அரிது என்று இருந்த காலம் மாறி..தற்போது ஆளுக்கு ஒரு செல்போன்களை அனைவரும் வைத்திருப்பதை காண முடிகிறது. அதிலும் ஸ்மார்ட் போன்கள் வந்து விட்ட பிறகு மக்களிடையே செல்போன் பயன்படுத்தும் பழக்கம் அபரிமிதமாக பெருகிவிட்டது. ஆறாம் விரலை போல எந்நேரமும் செல்போனும் கையுமாக அலைவதை காண முடிகிறது.

விலை உயர்ந்த செல்போன்களை பலரும் பயன்படுத்துவதால் செல்போன்களை குறிவைத்து திருட்டு சம்பவங்களும் நடக்கின்றன. செல்போன்கள் வெறும் பேசுவதற்கு மட்டும் இன்றி வங்கி பரிவர்த்தனை முதல் தனிப்பட்ட தரவுகள் பலவற்றையும் சேமித்து வைத்து இருக்கும் முக்கியமான சாதனமாக மாறிவிட்டது. இதனால், செல்போன்கள் தொலைந்தாலோ, பறிகொடுத்தாலோ மக்கள் பெரும் பதற்றம் அடைந்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார்கள்.
இதனால், மக்கள் காவல் நிலையங்களுக்கு சென்று அலைய வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு நேர விரயமும் ஏற்படுகிறது. இந்த நிலையில், தொலைந்த அல்லது திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்க வேலூர் மாவட்ட போலீசார் அசத்தலான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இது குறித்த விவரத்தை பார்ப்போம்:- தற்போது செல்போன்களை தொலைத்து விட்டாலோ திருடு போய்விட்டாலோ அதனை கண்டுபிடிக்க போலீஸ் நிலையம் செல்ல வேண்டியிருக்கிறது.
இந்தசூழலில், செல்போன் தொலைந்து விட்டாலோ, திருடு போய்விட்டாலோ அது குறித்து புகார் அளிக்க செல் டிராக்கர் (Cell Tracker) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியில் தொலைந்து போன செல்போன் பற்றிய விவரங்களை பதிவு செய்து புகார் அளித்தால் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலூர் போலீசார் தெரிவித்துள்ளனர். செயலியில் மட்டும் இன்றி வாட்ஸ் அப் மூலமாகவும் புகார் அளிக்கலாம். 9486214166 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு செல்போனை தொலைத்த நபரின் விவரம் மற்றும் செல்போனின் ஐஎம்இஐ நம்பரை அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பொதுமக்கள் தங்களது செல்போனை தொலைத்து விட்டாலோ அல்லது அது திருடப்பட்டு விட்டாலோ எளிதாக கண்டுபிடிக்க வகையிலான வசதியை மத்திய அரசும் அறிமுகம் செய்துள்ளது நினைவுகூரத்தக்கது. கடந்த மே 17 ஆம் தேதி இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. டிஓடி மையம் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் மூலம் தொலைந்து போன அல்லது திருடுபோன மொபைல் ''ஐஎம்இஐ'' எண்ணைக் கொண்டு செல்போன்கள் இருக்கும் இடத்தையும் அந்த மொபைலை பயன்படுத்த முடியாதவாறு முடக்கவும் முடியும்.
இதை எப்படி செயல்படுத்துவது என்றால், https://sancharsaathi.gov.in/தளத்திற்குள் செல்ல வேண்டும். அதில் CEIR என்ற ஆப்ஷனில் சென்று அதில் ஐஎம்ஐ எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் உங்கள் தொலைந்து போன செல்போன் எங்கிருந்தாலும் பிளாக் செய்ய முடியும். பின்னர் காவல்துறையில் புகார் அளித்து உங்கள் செல்போனை எளிதாக மீட்கலாம்.












Click it and Unblock the Notifications