எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் வேலு! கண் ஜாடை அறிந்து செயலாற்றுவார்! முதலமைச்சர் பாராட்டு!
திருப்பத்தூர்: எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் வேலு என முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
துரைமுருகன் ஊரில் எ.வ.வேலுவுக்கு முதலமைச்சரிடமிருந்து கிடைத்த இந்தப் பாராட்டை அவரது ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை.
துரைமுருகனை பற்றி திருப்பத்தூரில் பேசும் போது, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அமைச்சர் என்ற ஒற்றை வரியில் அவரை பற்றி முடித்துக் கொண்டார் ஸ்டாலின்.
அமைச்சர் எ.வ.வேலுவை பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

கண் ஜாடை
"நான் என்ன நினைப்பேன் என்பதை, நான் சொல்லாமலேயே, என் கண் ஜாடையைப் புரிந்து கொண்டு செயலாற்றுவதில் எ.வ.வேலு முன்னிலையில் இருக்கிறார்" என்று தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவர் எ.வ.வேலு. கலைஞரின் மனதை நிறைவு செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல, எளிதான செயல் அல்ல, நம் துரைமுருகன் அவர்களுக்குத் தெரியும். அவரோடு நெருங்கிப் பழகக்கூடியவர்களுக்குத் தெரியும்.

கருணாநிதி மனதில்
''கலைஞர் மனதை அறிந்து, புரிந்து, அதைப்போலவே செயல்படுத்திக் காட்டுவதும் எளிதான செயல் அல்ல. அதில் ஒரு சிலர்தான் சிறப்பாகச் செயல்பட்டு தலைவர் கலைஞரின் பாராட்டைப் பெற்றார்கள். அதில் எ.வ. வேலுவும் ஒருவர். அதனால்தான், 'எதிலும் வல்லவர் வேலு; அதனால்தான் அவர் எ.வ. வேலு' என்று நான் குறிப்பிட்டேன். 'எ' -எதிலும், 'வ' - வல்லவர்.

எதிலும் வல்லவர்
அத்தகைய எதிலும் வல்லவர் உங்கள் மாவட்டத்திற்கு கிடைத்திருக்கிறார். அதனால், திருப்பத்தூர் - 'திரு-புத்தூர்' என்று சொல்லும் அளவுக்குப் புதிதாக இப்போது மாறிக் கொண்டு வந்திருக்கிறது. கடந்த 25-ஆம் நாளன்று இந்த விழா நடந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த வாரம், லேசான காய்ச்சல் எனக்கு ஏற்பட்டு, அது முழுமையாக குணமாகாத காரணத்தால், மருத்துவர்கள் "ஒருசில நாட்கள் ஓய்வெடுப்பது நல்லது" என்று எனக்கு உத்தரவிட்டதால், அந்த குறிப்பிட்ட தேதியில் என்னால் வர முடியவில்லை.

வேலூர் நிகழ்ச்சி
இதனிடையே இது தொடர்பாக நாம் விசாரித்ததில், அமைச்சர் துரைமுருகனை பற்றி இன்று மாலை வேலூரில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் குறிப்பிட்டு பாராட்டி பேசவிருந்ததால் காலை திருப்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அதனை தவிர்த்ததாக தெரிவித்தார்கள்.












Click it and Unblock the Notifications