ஆட்டை கடித்து குதறிய நாய்.. பெண் உரிமையாளரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்- திருப்பத்தூரில் டென்ஷன்!
திருப்பத்தூர் : வாணியம்பாடி அருகே வளர்ப்பு நாய், ஆட்டை கடித்ததால், பஞ்சாயத்தார் முன்பாக நாயின் பெண் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்லப்பிராணிகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகி விடுவார்கள். ஒரு சிலரைத் தவிர செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பெரும்பாலோனோருக்கு ஆர்வமும், விருப்பமும் அதிகமாக இருக்கும். அதிலும் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர். இந்தப் பிராணிகளால் சில சமயத்தில் அக்கப்பக்கத்தாருடன் பிரச்னையும் ஏற்படுவது வழக்கம். அதுபோன்ற சம்பவம், வாணியம்பாடி அருகே அரங்கேறியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாப்பா நேரி பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி தேன்மொழி என்பவர் தனது வீட்டில், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இதேபோல் வேப்பமர சாலை பகுதியை சேர்ந்த பவுன் என்ற பெண் ஆடுகளை வளர்த்து வருகிறார். அவர் தன்னுடைய ஆடுகளை பாப்பா நேரி பகுதியில் தேன்மொழி வீட்டின் அருகில் விவசாய நிலத்தில் ஆடுகளை மேச்சலுக்காக விட்டுள்ளார்.
அப்போது தேன்மொழியின் வளர்ப்பு நாய் பவுன் என்பவரின் ஆட்டை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பவுன் மற்றும் அவரது உறவினர்கள் தேன்மொழியிடம் சென்று, தங்களது ஆட்டை, நாய் கடித்துள்ளதாகவும் அதற்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதற்கு தேன்மொழி மறுத்ததால் கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
பஞ்சாயத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ஆட்டின் உரிமையாளரின் உறவினர்கள் தேன்மொழி மீது சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தேன்மொழியை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வளர்ப்பு நாய், ஆட்டை கடித்ததால், பஞ்சாயத்தார் முன்பாகவே நாயின் பெண் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications