கை விலங்கு இல்லாமல் கொலை குற்றவாளியை அழைத்து செல்வார்களா? சந்தேகம் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி
வேலூர்: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் மீது என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதில் சந்தேகம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவரை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஒரு கொலை குற்றவாளியை அதிகாலை நேரத்தில் அவசர அவசரமாக அழைத்து சென்றது ஏன்? தப்பிச் சென்றதால் சுட்டுக் கொன்றதாக சொல்கிறார்கள்.

கொலை குற்றவாளியை கை விலங்கு போட்டு பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் அவரது ஆதரவாளர்களும் தெரிவித்து வருகிறார்கள். எனவே ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியை போலீஸார் என்கவுன்ட்டர் செய்ததில் சந்தேகம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அது போல் அவர், கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீர் பெறுவது தொடர்பாக தமிழக விவசாயிகள் மீது திமுகவுக்கு கவலையே இல்லை.
திமுகவுக்கு ஆட்சி அதிகாரமும் இந்தியா கூட்டணியும்தான் முக்கியம். கூட்டணி முக்கியம் என்பதற்காக காவிரி நீர் பெறுவது தொடர்பாக முதல்வர் குரல் கொடுக்கவில்லை. கர்நாடகா அரசு உரிய நீரை வழங்க வேண்டும். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தால் திமுக வென்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பொன்முடி தொகுதியில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 11 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 11 பேரில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தின் வங்கிக் கணக்குகளில் இந்த கொலைக்கான பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் திருவேங்கடத்தின் வீட்டருகே புதைக்கப்பட்டதாக தெரியவந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக திருவேங்கடத்தை புழல் சிறையில் இருந்து அதிகாலை 5.30 மணி அளவில் மாதவரத்தில் உள்ள வெஜிடேரியன் வில்லேஜ் என்ற பகுதியில் போலீஸார் கவனத்தை திசை திருப்பி திருவேங்கடம் தப்பித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸார் துரத்திய போது அந்த பகுதியில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவலர்களை சுட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக அவரை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் இரு முறை சுட்டுள்ளனர். இதையடுத்து அவரது இடது பக்க நெஞ்சு பகுதியிலும் வயிற்று பகுதியிலும் குண்டுகள் பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications