பயங்கரம்.. மணல் கடத்தலை வீடியோ எடுத்த மாஜி ராணுவ வீரரை விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் -ஷாக் வேலூர்
வேலூர்: வேலூர் அருகே பொன்னை ஆற்றில் மணல் அள்ளியவர்களை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரர் உமாபதியை ஒரு கும்பல் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. இந்நிலையில் தான் இன்றும் சிலர் ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக லாரி, டிராக்டரில் மணல் அள்ளி சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முன்னாள் ராணுவ வீரரான உமாபதி என்பவர் மணல் கடத்தி சென்ற லாரி மற்றும் டிராக்டரை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த அந்த கும்பல் வேகமாக வந்து உமாபதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பிக்க ஓடியுள்ளார். இருப்பினும் விடாத அந்த கும்பல் அவரை விரட்டி விரட்டி வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. இதில் வெட்டுக்காயமடைந்த உமாபதி உடனடியாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் உமாபதியை எருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த முனிசாமி, குமரேசன், அவர்களின் மகன்கள் நவீன், சூர்யா ஆகியோர் வெட்டியது தெரியவந்தது. இதுபற்றி மேல்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதுபற்றி போலீசிடம் கேட்டபோது, ‛‛உமாபதி மற்றும் முனிசாமி, குமரேசன் இடையே ஏற்கனவே நிலத்தகராறு உள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதமும் இருக்கிறது. இதற்கிடையே மணல் ஏற்றி சென்ற வாகனத்தை உமாபதி வீடியோ எடுத்துள்ளார். இதனால் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்'' என்றனர்.
மேலும் உமாபதியை அரிவாளால் வெட்டிய முனிசாமி, குமரேசன் உள்ளிட்ட 4 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் எருக்கம்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications