காட்பாடியில் ஓட்டல் நடத்தும் உமா.. ‘டபுள் மடங்கு’ஆசையால் மயங்கிய மகாலட்சுமி.. வேலூரில் ட்விஸ்ட்
வேலூர்: இரட்டிப்பு பண ஆசை யாரைத்தான் விட்டது. சதுரங்க வேட்டை பட பாணியில், ஆசையை தூண்டி பணத்தை பறிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். மக்களின் ஆசையை தூண்டி வலையில் வீழ்த்தி உள்ளது ஒரு தம்பதி. காட்பாடியில் துணி வியாபாரம் செய்யும் பெண்ணிடம் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ.55.50 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மக்களுக்கு பணத்தின் மீது உள்ள பேராசையையும், அந்த ஆசையை வைத்தே வீழ்த்துவோர் குறித்தும் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு விட்டன. குறிப்பாக சொல்வது என்றால் சதுரங்க வேட்டை படத்தை கூறலாம். இந்த படத்தில் தான் எப்படி எல்லாம் ஒருவரை ஏமாற்றி பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை தெளிவாக காட்டியிருப்பார்கள்.

தங்க நகை மீது உள்ள மோகத்தில் மக்கள், எப்படி இரவே ஒரு தங்க நகைக்கடைக்கு சென்று ஏமாறுவார்கள் என்பதை காட்டியிருப்பார்கள். இதேபோல் எம்எல்எம் எனப்படும் ஆட்களை சேர்த்தால் காசு பாணி முறையையும் தோலுரித்திருப்பார்கள். இது இல்லாமல் இரட்டிப்பு பணம், இரிடியம் மோசடி என எல்லாவற்றையும் காட்டியிருப்பார்கள்.இந்த படத்தை தமிழ்நாட்டில் பார்க்காதவர்கள் மிக குறைவு. ஆனாலும் இன்றுவரை ஆசையை தூண்டிவிட்டு ஏமாற்றுவது குறையவே இல்லை..
சிலர் 10 வட்டி தருகிறேன், ஐந்து வட்டி தருகிறேன் என்று கூறி ஊர் முழுவதும் பணம் வாங்குகிறார்கள். மாதம் மாதம் சரியாக வட்டிக்கட்டுவது போல் மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள். எல்லாரும் நம்பி பணத்தை கொடுத்த பின்னர், ஒரு கட்டத்தில் எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு வெளியூர்களுக்கு தப்பி விடுகிறார்கள். இதனால் அவர்களிடம் பணத்தை வசூலிக்க முடியாத நிலை பலருக்கும் ஏற்படுகிறது. இதேபோல் இரட்டிப்பு பணம் தருவதாகவும் மோசடி செய்கிறார்கள். அப்படித்தான் வேலூரில் இரட்டிப்பு பண ஆசை காட்டி மோசடி செய்திருக்கிறது ஒரு தம்பதி.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் துணி வியாபாரமும், மாதச்சீட்டும் நடத்தி வருகிறார். இவரும் வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி மேட்டு தெருவை சேர்ந்த 39 வயதாகும் உமாவும் பழகி வந்தனர். உமா மற்றும் அவரது கணவர் பாலுவும் (41) காட்பாடி தாராபடவேடு பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார்கள்.
இந்தநிலையில் காட்பாடி ரயில் நிலைய ஒப்பந்தம் எடுக்க உள்ளதாகவும், பெங்களூரில் புதிய ஓட்டல் ஆரம்பிக்க உள்ளதாகவும் மகாலட்சுமியிடம் தம்பதி கூறியுள்ளனர். மேலும் அதற்கு பணம் தேவைப்படுவதால், கொடுக்கும் பணத்தை 2 மடங்காக திருப்பி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய மகாலட்சுமி ரூ.55 லட்சத்து 55 ஆயிரத்தை கொடுத்தாராம்.
ஆனால் பணத்தை திருப்பி தராமல் உமா பாலு தம்பதி ஏமாற்றி வந்துள்ளார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா, பாலு ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications