அமைச்சர்கள் வீரமணி, வேலுமணி, தங்கமணிக்கு Money தான் குறிக்கோள்.. மு.க.ஸ்டாலின் பொளேர் தாக்கு
ஜோலார்பேட்டை: தமிழக அமைச்சர்களான வீரமணி, வேலுமணி, தங்கமணி ஆகியோர் Money-ல் தான் குறிக்கோளாக இருக்கின்றனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்து பேசியதாவது:
இந்த மாவட்டத்தில் வீரமணி என ஒரு அமைச்சர் உள்ளார். பழனிசாமி அமைச்சரவையில் 3 மணிகள் இருக்கின்றன. அருமையான மணிகள். வேலுமணி, தங்கமணி, வீரமணி ஆகியோர்தான் அந்த மூன்று பேரும்.

3 அமைச்சர்கள்
வேலுமணி அப்பட்டமாக ஊழல் செய்யக் கூடியவர். எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார். தங்கமணி சைலன்ட்டாக செய்பவர். ஆனால் வீரமணி எப்படி செய்வார் என்பது உங்களுக்கு தெரியும்.

Moneyதான் குறிக்கோள்
இந்த 3 பேர் பெயரிலும் Money (பணம்) இருக்கிறது. அதனால் Money-ல் தான் குறியாக இருப்பார்கள். கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் இதுதான் அவர்களது கொள்கை. தன்னுடைய அமைச்சர் பதவியை பயன்படுத்தி கொள்ளையடித்ததை தவிர இந்த மாவட்ட மக்களுக்கு அமைச்சர் வீரமணி எதுவும் செய்யவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்னர் வேலுமணி, வீரமணியின் பினாமி வீடுகளில் ரெய்டு நடத்தினார்கள். அது என்ன ஆச்சு? என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

பாஜக அரசின் ரெய்டுகள்
மத்தியில் மோடி தலைமையில் இருக்கும் பாஜக அரசு அம்மையார் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓ. பன்னீர்செல்வம், பழனிசாமி பினாமி வீடுகளில் ரெய்டு நடத்தினார்கள். இந்த சோதனையின் போது ஆதாரங்களை கைப்பற்றி அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டனர். அதேபோல் சில அமைச்சர்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருக்கின்றனர். அதுல ஒருவர்தான் இந்த தொகுதி அமைச்சர் வீரமணி.

சர்ச்சை வீரமணி
அமைச்சர் வீரமணியின் வேலை என்னவெனில் இடங்களை வளைப்பதுதான். இடத்தின் உரிமையாளர்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங்குவது. இதில் மிகவும் கெட்டிக்காரர் அமைச்சர் வீரமணி. இதையே முழு நேரமாக செய்து கொண்டிருக்கிறார் வீரமணி. வேலூரில் மையமான இடம் ஒன்றை வளைக்கும் தகராறில் அமைச்சர் வீரமணியே நேரில் சம்பந்தப்பட்டார். இந்த பிரச்சனை சென்னை உயர்நீதிமன்றம் வரைக்கும் போனது. அப்போது நீதியரசர்கள், நிலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் வீரமணியின் தனிப்பட்ட தலையீடு இருப்பதாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு அனுமதி தேவை இல்லை என்று தீர்ப்பு வழங்கினர். நில விவகாரத்தில் வீரமணி சிக்கிய வீடியோவும் வெளியானது. அப்படிப்பட்ட வீரமணியை இந்த தேர்தலில் நீங்கள் நிராகரிக்க வேண்டும். இந்த தேர்தலில் அவரை தோற்கடிக்க வைக்க வேண்டாமா? இல்லையா?
அதிமுக நாடகம்
தேர்தல் நேரம் என்பதால் சிறுபான்மையினர் மீது அக்கறை இருப்பதாக அதிமுகவினர் காட்டிக் கொள்கின்றனர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை ரத்து செய்ய ஆதரவு தெரிவித்தது அதிமுக; முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக- ஆதரவு தெரிவித்ததுடன் நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்ததும் அதிமுகதான். சி.ஏ.ஏ. சட்ட திருத்தத்தை ஆதரித்ததும் அதிமுகதான். ஆனால் தேர்தல் அறிக்கையில் சி.ஏ.ஏ.வை நீக்க வலியுறுத்துவோம் என்று கூறியிருப்பது மிகப் பெரிய நாடகம். ராஜ்யசபாவில் அதிமுக, பாமகவும் எதிர்த்து வாக்களித்திருந்தால் சி.ஏ.ஏ. நிறைவேறி இருக்காது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications