4 KM தூரம் நின்ற வாகனங்கள்; முடிவு தெரியாமல் கலைய மறுத்த மக்கள்; ஸ்தம்பித்த சென்னை -பெங்களூர் ஹைவே!
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
இதனால் சாலையின் இருமருங்கிலும் சுமார் 4 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு
குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால் சாலையை மறிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 4 நாட்களாக குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாக தெரிகிறது. வள்ளிப்பட்டி ஏரி, கோவிந்தாபுரம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது ஆக்கிரமிப்புகள் காரணமாக ஊருக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வெள்ளநீரை இப்போது வெளியேற்றுவார்கள் அப்போது வெளியேற்றுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் காட்டிய மெத்தனம் வெகுண்டெழ வைத்துவிட்டது.
4 கி.மீ தூரம்
இதையடுத்து சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் 4 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் ஹாரன்களை அலறவிட்டபடி அணிவகுத்து நின்றது. இதையறிந்து நிகழ்விடத்துக்கு ஓடோடி வந்த வானியம்பாடி பேரூராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் வெள்ளநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
ஆக்கிரமிப்பு
4 நாட்களாக மக்கள் கோரிக்கை வைத்தபோதே இதை செய்திருக்க வேண்டிய அரசு அதிகாரிகள், பெங்களூர் சாலையை மறித்த பிறகு நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக்கிரமிப்புகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் அதை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. சென்னையில் வெள்ளநீரை வெளியேற்ற முதலமைச்சர் காட்டிய வேகத்தை தொலைக்காட்சிகளில் பார்த்தும் கூட பல ஊர்களில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் தூங்கி வழிவது தொடர்கதையாக உள்ளது.
கடும் அவதி
இதனிடையே இந்தப் போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மக்களின் கோபம் அதிகரித்து போராட்டம் பெரிதாக வெடிப்பதற்கு முன்பே காவல்துறையினர் நிலைமையை சுமூகமாக்கியதால் ஒரு மணி நேரத்தில் இப்பிரச்சனை முடிவு வந்தது.