துரைமுருகன் வீட்டில் ரெய்டு நிறைவு… கணக்கில் வராத ரூ.10.50 லட்சம் பறிமுதல்
வேலூர்: துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியில் நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றுள்ளது.

இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் பேசியதாவது: வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது என்றனர்.
துரைமுருகன் வீடு, அவரது மகனின் பள்ளி, கல்லூரியில் நடந்த சோதனை நிறைவுபெற்றது என்றும், காட்பாடி கிருஸ்தியான் பேட்டையில் உள்ள கல்லூரியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது எனவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே, காட்பாடி கிருஸ்தியான் பேட்டையில் உள்ள பள்ளியில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்றிரவு தொடங்கிய வருமானவரி சோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து பேசிய துரைமுருகன், கல்லூரியில் உள்ள வகுப்பறைகள், மாணவர் விடுதியில் உள்ள அலமாரிகளை உடைத்து சோதனை நடத்தினர் என்றார்.
கணக்கு வழக்குகள் சரியாக உள்ளதால் எதையும் பறிமுதல் செய்யவில்லை என எழுதி கொடுத்துவிட்டனர் எனவும் கூறினார்.
சோதனையை நடத்திய வருமான வரித்துறையினர் ஏவப்பட்டவர்கள் என்றும், பிரதமர் மோடி - முதல்வர் பழனிசாமி கைகோர்த்துக் கொண்டு வருமானவரி சோதனையை ஏவிவிட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications