யார் அந்த ராணிப்பேட்டை கார்த்திகா.. இ-சேவை மையம் மூலம் எக்குத்தப்பான வேலை.. கண்டுபிடித்தது எப்படி?
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 36 வயதாகும் கார்த்திகா என்ற பெண் இ சேவை மையம் நடத்தி வருகிறார். இவர் இ-சேவை மையத்திற்கு பதிவு செய்ய வருபவர்களிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவதாகவும், அரசு வேலை வாங்கிதருவதாகவும், கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு கடன்பெற்று தருவதாகவும் பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்னணு நிறுவனம் மற்றும் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக இ- சேவை மையங்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அரசின் அனைத்து சேவைகளும் மின்னணு சேவைககளாக மாறிவிட்டது. இதன் காரணமாக அரசு இ சேவை மையங்களை தாண்டி தனியாரும், தொழில் முனைவோரும் இ சேவை மையங்களை ஆரம்பிக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது.

அரசு இ சேவை மையங்களில் அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்கிற நிலையில், தனியார் இ சேவை மையங்களில் புதிதாக ஆதார் எடுப்பது, புதிதாக ஆதார் பயோமெட்ரிக், பட்டா உள்ளிட்ட வருவாய் துறை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பது தவிர பெரும்பாலான சேவைகளை தனியார் இசேவை மையங்களில் மேற்கொள்ள முடியும். புதிதாக ரேஷன் கார்டு எடுப்பது, ரேஷன் கார்டில் திருத்தம், பான் கார்டு எடுப்பது, அரசின் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவது உள்பட இங்கு சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களையும் செலுத்த முடியும்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணபிக்க இயலும். மக்கள், அரசு அலுவலகங்களுக்கு சென்று சிரமப்படுவதை தடுக்கும் நோக்கில் இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் மேல்வன்னியர் தெருவில் வசித்து வரும் 36 வயதாகும் கார்த்திகா என்பவர் சோளிங்கர் பஜார் தெருவில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த இ-சேவை மையத்திற்கு பதிவு செய்ய வருபவர்களிடம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும், கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு கடன்பெற்று தருவதாகவும் பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.இதனால் பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் அது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டருக்கு தபால் மூலம் புகார் அனுப்பியிருந்தனர்.
அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டார். இதனையடுத்து வருவாய்த்துறையினர் விசாரணையில் கார்த்திகா நடத்திய இ-சேவை மையத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்திற்கு அவர்கள் 'சீல்' வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மோசடி குறித்து கார்த்திகாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications