சர்கார் பட பேனரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்.. தூக்கில் தொங்கியதால் பரபரப்பு
சர்க்கார் படபேனர் கிழித்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
Recommended Video
வேலூர்: சர்க்கார் பட பேனரை கிழித்த இளைஞர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய விவகாரம் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலரையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
காவேரிப்பாக்கம் ஈராளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், சென்னையில் கால்டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தீபாவளிக்கு லீவு என்பதால் தனது ஊருக்கு வந்தார். அப்போது சர்க்கார் படம் நேற்று வெளியானதால், விஜய் ரசிகர்கள் ஊரெங்கும் படத்தின் பேனர்களை வைத்திருந்தார்கள்.
பேனர் கிழிப்பு
அதில் ஒரு பேனர் மணிகண்டன் வீட்டின் அருகிலேயே வைத்திருந்தார்கள். பண்டிகை என்பதால் நேற்று மணிகண்டன் தண்ணி அடித்துள்ளார். மதுபோதையில் வீட்டு அருகில் இருந்த பேனரை மணிகண்டன் கிழித்துவிட்டதாக தெரிகிறது. இதை பார்த்ததும் விஜய் ரசிகர்களுக்கு கோபம் வந்துவிட்டது. எப்படி நாங்கள் வைத்தத பேனரை கிழிக்கலாம் என்று மணிகண்டனிடம் 10-க்கும் மேற்பட்டோர் சண்டைக்கு போயுள்ளனர். மேலும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்த மணிகண்டனை தாக்கியும் உள்ளனர்.
கதவை திறங்க
இப்படி ஒரு நபரை ஒரு கும்பலே சேர்ந்து கொண்டு அடிப்பதை பார்த்த மணிகண்டனின் சொந்தக்காரர்கள் மீட்டு உறவினர் ஒருவரின் வீட்டுக்குள் தள்ளி கதவையும் வெளிப்பக்கமாக தாளிட்டு வந்துவிட்டனர். ஆனால் வீட்டுக்குள் சென்ற மணிகண்டனோ எல்லோரும் தன்னை சேர்ந்து தாக்கிய வலியிலும், ஆத்திரத்திலும், கத்தினார். "கதவை திறங்க.. என்னை அடிச்சவங்களை நான் சும்மா விட மாட்டேன்.. என்னை ஏன் உள்ள வச்சி தாழ்ப்பாள் போடறீங்க?" என்று உள்ளிருந்து கொண்டே கூச்சல் போட்டார்.
தூக்கில் தொங்கினார்
ஆனால் நிலைமையை உணர்ந்த சொந்தக்காரர்கள், எப்படியும் வெளியில் வந்தால் பிரச்சனை பெரிசாகிவிடும் என்று நினைத்து கதவை திறக்கவே இல்லை. இதனிடையே பேனர் கிழித்து தகராறு ஏற்பட்ட சம்பவம் ஊரெங்கும் பரவிவிட்டது. அதனால் விஜய் ரசிகர்கள் எல்லோரும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார்கள். கொஞ்ச நேரம் கழித்து கதவை திறந்து உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தால் மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
போலீசில் புகார்
இதை பார்த்ததும் உறவினர்கள் அவரை கட்டிக் கொண்டு கதறி அழுதனர். இதுகுறித்த தகவல்உடனடியாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களும் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் உறவினர்களோ, மணிகண்டனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து புகாரும் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையிலும் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
7 பேர் மீது வழக்கு பதிவு
எல்லோரும் ஒன்றுகூடி அடித்து அவமானம் தாங்காமல் மணிகண்டன் தற்கொலை செய்து இறந்துபோனாரா? அல்லது தாழ்ப்பாளர் போடப்பட்ட கதவை திறந்து யாரேனும் அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்தெல்லாம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்க்கார் பட பேனரை கிழிக்க போய்.. தற்போது மரணம் வரை கொண்டுவந்து விட்டுவிட்ட இந்த சம்பவம் மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.