என் பொண்ணை இப்படி பறி கொடுத்துட்டேனே.. கதறி அழும் இளம் தாய்.. சோகத்தில் ஆம்பூர்
ஷேர் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மாணவி பலியானாள்
Recommended Video
ஆம்பூர்: "என் பொண்ணை இப்படி பறி கொடுத்துட்டேனே" என்று கதறி அழும் இளம்தாயை கண்டு ஆம்பூர் பகுதி மக்கள் கண்கலங்கி விட்டனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் மாளிகை தோப்பு பகுதியில் வசித்து வரும் தம்பதி முனுசாமி - பத்மா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளனர். இதில் முதல் குழந்தைதான் திவ்யதர்ஷினி. இவள் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். லோகேஷ் 1-ம் வகுப்பும் படித்து வருகிறான்.
இருவரும் ஆம்பூர் இந்து ஆரம்ப பள்ளியில் படிக்கின்றனர். இவர்கள் தினமும் பள்ளிக்கு ஷேர் ஆட்டோவில்தான் செல்வது வழக்கம். அந்த ஷேர் ஆட்டோவில் எப்பவுமே 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றி கொண்டு செல்வாராம் டிரைவர் கார்த்திகேயன். இன்று வழக்கம்போல் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.

குழாய் அமைக்கும் பணி
அதனால் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் நிரம்பி வழிந்திருக்கிறது ஆட்டோ. திவ்யதர்ஷினியை தனது சீட்டுக்கு பக்கத்தில் ஒட்டி உட்காரவைத்து அழைத்து சென்றுள்ளார் டிரைவர். மல்லிகை தோப்பு தர்கா பகுதியில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விழுந்து விட்டாள்
இதனால் நிறைய பள்ளங்களும் தோண்டப்பட்டுள்ளன. அந்த பள்ளங்களில் ஆட்டோ வேகமாக ஏறி இறங்கி சென்றிருக்கிறது. அப்படி செல்லும்போதுதான், பிடிமானத்தை இழந்த திவ்யதர்ஷினி தடுமாறி கீழே விழுந்துவிட்டாள்.

உயிரிழப்பு
இதில் அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விட்டாள். இதை பார்த்து பதறிபோன பொதுமக்கள், திவ்யதர்ஷினியை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தீவிரமாக சிகிச்சை அளித்தும், பலனின்றி உயிரிழந்தாள் சிறுமி. மகளை பறி கொடுத்த சிறுமியின் தாய் கதறி அழுதது அங்கிருந்த எல்லோரையுமே கண்கலங்க செய்துவிட்டது.

பள்ளி விடுமுறை
திவ்யதர்ஷினி இறந்த செய்தி கேட்டதும், அவளது பள்ளி மாணவ-மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதனர். பள்ளி வளாகமே சோகத்தில் மூழ்கிவிட்டது. இதையடுத்து, பள்ளிக்கு உடனடியாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன், டிரைவர் கார்த்திகேயனையும் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications