வேலூர் ரேஷன் கடைகளிலா இப்படி .. பறந்து வந்த எஸ்எம்எஸ்.. ஆடிப்போன பொதுமக்கள்
வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் இயங்கும் ரேஷன் கடைகள் சிலவற்றில் பொருட்கள் வாங்காமலேயே, வாங்கியதாக குறுந்தகவல் வருவதாகவும், இதன் மூலம் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் 130 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் 70 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் பயன் பெற்று வருகின்றார்கள். இந்த பகுதியில் கடந்த ஒருவருடமாக மாத இறுதியில் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்காமலேயே உணவுப்பொருள் பெற்றதாக செல்போனுக்கு எஸ்எம்எஸ் வருகிறதாம். அடிக்கடி இது போல் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையின் விற்பனையாளர் இன்று கடைக்கு விடுமுறை என பெயர் பலகையில் எழுதிவைத்து விட்டு அணைக்கட்டு தாலுகாவில் நடந்த வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ள போயிருக்கிறார்.
ஆனால் நேற்று பகல் 11.40 மணி அளவில் குடும்ப அட்டைதாரர் ஒருவருக்கு பொருட்கள் வாங்காமலேயே 15 கிலோ புழுங்கல் அரிசி, 5 கிலோ பச்சரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்பட்டுள்ளதாக அவரது செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளதாம் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ரேஷன் கடைக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் ரேஷன் கடை பூட்டப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார் . அவர் தான் தாலுகா அலுவலகத்தில் கூட்டத்தில் இருப்பதாகவும், அப்படி ஒரு எஸ்எம்எஸ் தங்கள் கடையில் இருந்து வந்திருக்காது என கூறினாராம்.
இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் . இது பற்றி அவர்கள் கூறுகையில், பயோமெட்ரிக் முறையில் கைரேகை இல்லாமலேயே பொருட்களை விற்பனை செய்வது அடிக்கடி நடந்து வருகிறது. விற்பனையாளர்கள் எந்த முறையை கையாண்டு உணவுப் பொருட்களை மோசடி செய்கிறார்கள் என்ற விவரத்தை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வேலூர் பள்ளிகொண்டாவில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமலேயே வாங்கியதாக குறுந்தகவல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications