தீயில் கருகிய வேளாண் கல்லூரி மாணவிகள்.. இறுதிவரை நியாயம் கிடைக்காத சோகம்..வழக்கு கடந்து வந்த பாதை
Recommended Video

வேலூர்: ஆயிரம் கனவுகளுடன் வேளாண் கல்லூரிக்கு படிக்க சென்ற 3 மாணவிகளை அதிமுகவினர் எரித்த வழக்கில் இறுதி வரை அப்பெண்களுக்கு நீதி கிடைக்காமலேயே போய்விட்டது.
தருமபுரியில் பேருந்து எரிப்பு சம்பவத்தில் அதிமுகவினரால் 3 பெண்கள் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 3 பேரும் இன்று விடுதலை ஆகியுள்ளனர்.
இந்த வழக்கில் கடைசி வரை 3 பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் பொதுமக்களுக்கு உள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.

நீதிமன்றம்
கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது. அப்போது தருமபுரி அருகே கோவை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் வந்த பேருந்தை அதிமுகவினர் சிலர் தீவைத்து எரித்தனர். இதில் பேருந்துக்குள் இருந்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற, மூன்று மாணவியர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தீர்ப்பு
இதையடுத்து, பேருந்துக்கு தீ வைத்ததாக அதிமுகவைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பளித்தது.

தமிழக அரசு
தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில் 3 பேரின் தூக்கு தண்டனை 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 1600 கைதிகளை ரிலீஸ் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி தமிழக அரசு முடிவு செய்தது.

இன்று விடுதலை
அதன்படி மூவரையும் விடுவிக்குமாறு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் எழுதியது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்காமல் அதை கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி ஆளுநர் நிராகரித்துவிட்டார். நவம்பர் 10-ஆம் தேதி இரண்டாவது முறையாக மூவர் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் இன்று நவம்பர் 19-ஆம் தேதி அதிமுகவினர் 3 பேரும் வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications