திமுகவை எந்த கொம்பனாலும் தொடக்கூட முடியாது.. முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஆவேசம்
வேலூர்: திமுக முப்பெரும் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவைச் சாடி பேசினார். அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் நிச்சயம் திமுக வெல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
தந்தை பெரியார் பிறந்த நாள், திமுகவைத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15) , திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழா என்ற பெயரில் ஆண்டுதோறும் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று வேலூரில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் மூத்த அமைச்சர்கள் திமுக மூத்த தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, "அண்ணா, பெரியார் பிறந்த நாள் விழா, திமுக பவளவிழா இன்று சிறப்பாக நடக்கிறது. கருணாநிதி நூற்றாண்டில் நடக்கும் இந்த முப்பெரும் விழா வரலாற்றில் நிலைத்து நிற்கும்... மேலும், நாட்டிலேயே இயக்கத்திற்காக உழைத்தவர்களை அங்கீகரிக்கும் ஒரே கட்சி திமுக தான்..
இந்த முப்பெரும் விழா மட்டும் அதற்குச் சான்று இல்லை. எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் மூத்த நிர்வாகிகளுக்குப் பொற்கிழி வழங்கி வருகின்றேன். இதுவரை 30 மாவட்டங்களில் 30 கோடி மதிப்பில் மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளோம்.
இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பார் கருணாநிதி.. இயக்கத்தை மட்டுமின்றி இங்குள்ள எந்தவொரு கிளை செயலாளரையும் கூட தொட்டுக் கூட பார்க்க முடியாது.. இப்போது திமுகவில் பல்வேறு அணிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இளைஞரணி சார்பில் நூலகம், பேச்சுப் போட்டி, மாரத்தான் போட்டிகளை நடத்துகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.. நான் இப்போது வேலூர் வந்த போதும், என்னைச் சூழ்ந்து கொண்டு இந்தத் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்கள். தமிழ்நாடு முழுக்க இந்தத் திட்டத்தின் கீழ் 1.06 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.. இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக இது இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய மாநாடாக இளைஞரணி மாநாடு இருக்கும்.

ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்த போது நெல்லையில் தலைமையில் முதல் மாநாடு நடந்தது. அதில் ஒரு 50% அளவுக்கு நாங்கள் இந்த மாநாட்டை நடத்துவோம். உங்களை யாராலும் மிஞ்ச முடியாது. உங்கள் உழைப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.
நாம் கடந்த 2021இல் நடந்த சட்டசபையில் அடிமைகளை விரட்டி அடித்தோம். அதேபோல அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் அடிமையின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications