பிச்சையா போடுறீங்க? புதிய பிரியாணி கடையை பார்த்ததுமே வேலூர் கலெக்டருக்கு வந்த கோபம்! சீல் வைப்பு
வேலூர்: வேலூரில் இன்று புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை கொடுத்த அறிவிப்பால் ஏராளமான மக்கள் நீண்ட பிரியாணி வாங்க காத்திருந்தனர். இதனை பார்த்து கோபமடைந்த கலெக்டர், ‛பிச்சையா போடுறீங்க' எனக்கூறி, கூட்டத்தை கலைக்க கூறி கடைக்கு சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் காட்பாடியில் உள்ள சித்தூர் பஸ் நிலையம் அருகே இன்று புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. பிரியாணி கடையை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஆபர்கள் இருந்தன.

அதாவது திறப்பு விழாவையொட்டி கடையில் ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம். ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் இன்னொரு சிக்கன் பிரியாணி இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து திட்டமிட்டப்படி பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது.
இதையடுத்து கடையின் முன்பு ஏராளமான மக்கள் குவிந்தனர். எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகளவில் கூடியது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் வரிசையாக நிற்கும்படி கேட்டு கொள்ளப்பட்டனர். அதைத்தொடர்ந்து பிரியாணி வாங்கும் ஆர்வத்தில் மக்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நிற்க தொடங்கினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட துவங்கியது. இதுபற்றி அறிந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றதை பார்த்து அவர் கோபமடைந்தார். இதையடுத்து அவர் பிரியாணி கடை மேனேஜரை அழைத்து கடிந்து கொண்டார்.
அப்போது, ‛‛ஏன் இப்படி வைத்துள்ளீர்கள். பிச்சை போடுறீங்களா?. கடையை மூடுங்க.. வாடிக்கையாளர்களை உட்கார வைக்க முடியாதா? உங்களை நம்பி எத்தனை பேர் வெயிலில் காத்து கிடக்கின்றனர்'' என கடிந்து கொண்டார். இதையடுத்து கூட்டத்தை கலைக்கும் வகையில் போலீசார் கடையை மூட முயன்றனர். இதை பார்த்த பொதுமக்கள் பிரியாணி தான் முக்கியம் என கடைக்குள் வேகவேகமாக நுழைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்திவிட்டு கடையை பூட்டினர். மேலும் சம்பவம் குறித்து மாநகராட்சி கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த கடை உரிமமின்றி திறக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதன்மூலம் திறப்பு விழா கண்ட நாளிலேயே பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications