வேலூரில் DTCP சர்ட்டிபிகேட், சொத்து பத்திரம், நிலம்.. கலெக்டர் கையெழுத்தையும் விடாத போலி ஆசாமிகள்
வேலூர்: போலி ஆவணங்கள் அதிகம் உருவாகும் முக்கிய துறையாக சொத்து பதிவுத்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது.. போலி பத்திரங்கள், வில்லங்கச் சான்றிதழ்கள், பட்டாக்கள் தயாரித்து சொத்துக்களை அபகரிப்பது, விற்பது போன்ற மோசடிகள் அதிகமாக நடக்கின்றன. இதோ வேலூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து, 2 பேர் வசமாக போலீசில் சிக்கி உள்ளனர்.. என்ன நடந்தது தெரியுமா?
போலி கையெழுத்து போட்டு சொத்துக்களை அபகரிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.. இது நில மோசடி பொதுமக்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதுடன், இப்படி கையெழுத்து போடுவது சட்டப்படி குற்றமாகும்.. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர்.

வேலூரில் கலெக்டர் கையெழுத்து
போலி கையெழுத்து போட்டு சான்றிதழ் பெற்றாலும் அது கடுமையான குற்றமாகும். அந்த சான்றிதழ் சட்டப்படி செல்லாது என அறிவிக்கப்படும். சம்பந்தப்பட்டவர் மீது மோசடி, கள்ள ஆவணம் தயாரித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். அபராதம் அல்லது சிறைத் தண்டனை வரை விதிக்கப்படலாம். மேலும் அந்த சான்றிதழை பயன்படுத்தி பெற்ற எந்த உரிமையும் ரத்து செய்யப்படும்.
இப்படி ஒருவரின் கையெழுத்தை மற்றொருவர் போடுவதே சட்டப்படி குற்றம் என்றால், மாவட்ட கலெக்டரின் கையெழுத்தை வேலூர்க்காரர்கள் 2 பேர் போட்டுள்ளார்.. வீட்டு மனைகள் தொடர்பாக இப்படியான துணிச்சல் காரியத்தை செய்துள்ளனர்.
நிலம் சொத்து பத்திரம்
வேலூர், ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கு சதுப்பேரியில் 1.30 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது நிலத்தை ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் மற்றும் முகமத் ஆயூப்பாஷா வாங்கி, அதை வீட்டு மனைகளாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள்..
இதற்காக அவர்கள் சையத்பாரூக் என்ற நபரை அணுகி, தேவையான அனுமதிகளை பெற பெறுவதற்கு, உதவி செய்ய சொல்லி உள்ளனர்.. உடனே சையத்பாரூக், கருகம்புத்தூரை சேர்ந்த புரோக்கர் தியாகராஜனை அணுகி, அனுமதி பெறும் பணியை முடிக்கும்படி கேட்டிருக்கிறார்..
ஆனால் அவராலும் இந்த பணியை முடிக்க முடியவில்லை.. கடந்த 2023 முதல் இது சம்பந்தமான வேலைகள் எதுவுமே நடக்காமல், அப்படியே கிடப்பில் கிடந்தது.. எனவே பணிகளை விரைவாக முடிக்க தியாகராஜனுக்கு அழுத்தம் தரரப்பட்டது..
DTCP சான்றிதழ், தடையில்லாத சான்றிதழ்
இதனால் தியாகராஜன், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் தமிழ்ச்செல்வன் என்பவரை உதவிக்கு நாடினார். பணம் தருவதாகவும், எப்படியாவது தடையில்லாத சான்றிதழ்களை தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்..
பணத்துக்கு ஆசைப்பட்ட தமிழ்ச்செல்வனும், குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு, கலெக்டரின் கையெழுத்தை போலியாக தயாரித்து, அவர்கள் கேட்ட தடையில்லாத போலியான சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.
இதுபோல, வீட்டுமனைகள் அங்கீகாரம் தொடர்பாக DTCP சான்றிதழை ஆரணியை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவர் போலியாக தயாரித்து கொடுத்துள்ளார். ிபறகு மாவட்ட வருவாய் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன.. அப்போதுதான் அவை எல்லாம் போலியானவை என்று தெரிய வந்து, இவர்களின் குட்டு வெளிப்பட்டது..
வெளிச்சத்துக்கு வந்த உண்மை
இதையடுத்து, வேலூர் காவல் துறை திடீர் நடவடிக்கை எடுத்து, தியாகராஜனையும், தமிழ்ச்செல்வனையும் அதிரடியாக கைது செய்தனர்.. ஆனால், அதற்குள் சையத்பாரூக் மற்றும் ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.. எனவே அவர்களை போலீசார் வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த வழக்கு போலியான கையெழுத்து மற்றும் நில மோசடியுடன் தொடர்புடையது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.
வீட்டு மனைகள் அனுமதிக்கான போலியான சான்றுகளை தயாரிப்பது, நில மோசடிகள் போன்றவை தொடர்ந்து நடப்பதால், இதற்கான கடிவாளத்தை அரசு போட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன..!












Click it and Unblock the Notifications