“என் சாவுக்கு காரணம் பி.டி.ஓ தான்”.. கலெக்டருக்கு கடிதம்.. சத்துணவு அமைப்பாளரின் விபரீத முடிவு!
வேலூர்: தன் சாவுக்கு பி.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு சத்துணவு அமைப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரிஜாதம் ( 57). இவர் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். மேலும், கூடுதலாக இரண்டு பள்ளிகளில் பொறுப்பு சத்துணவு அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில், பாரிஜாதத்தை வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து குடியாத்தம் பி.டி.ஓ மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பாரிஜாதம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அதிகாரிகள் அவரிடம் கடுமையாக பேசி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாரிஜாதம் நேற்று முன்தினம் (ஜூலை 4) இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தன் மரணத்திற்கு இவர்கள்தான் காரணம் என குறிப்பிட்டு அவர் எழுதியதாக காவல் துறையின் கையில் சிக்கியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆய்வாளருக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், 'உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உயர்திரு காவல் ஆய்வாளர் அவர்களுக்கும்... என் மரணத்திற்கு காரணம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் தான். எனக்கு இந்த அளவிற்கு மன உளைச்சல் கொடுத்தவர்களை நீங்கள் தான் கேட்க வேண்டும்.
நான் மிகவும் தைரியசாலி. ஆனால் என்னை இவர்கள் செய்த கொடுமை மிக அதிகம். நான் 30 வருடங்களாக அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் சத்துணவு மையத்தில் அமைப்பாளராக வேலை செய்கிறேன். என் மன உளைச்சலுக்கு காரணமானவர்களை நீங்கள் தான் கேட்க வேண்டும்.
நான் என் உடன்பிறப்புகளை இழந்து மிகவும் மனவேதனையில் இருந்தேன். என் உடல்நிலையும் சரியில்லாமல் இருந்தது. இருப்பினும், நான் மனம் தளராமல் தினமும் பள்ளிக்கு செல்வேன். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டேன். என்னை நம்பி என் குடும்பமே உள்ளது. இவர்களை எல்லாம் பிரிந்து செல்கிறோம் என்ற மனவேதனை எனக்கு உள்ளது.

என் மகள், மகனுக்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்கள். என் மகள் பாசக்கார மகள். அவளுக்கும் 3 குழந்தைகள் உள்ளன. எனது மகன் எனக்கு 5 லட்சம் வரை செலவு செய்துள்ளான். இன்னும் அந்த வேதனையில் இருந்து மீளவில்லை. தயவுசெய்து என் குடும்பத்திற்கு ஏதாவது ஒரு உதவி செய்யுங்கள் ஐயா.. குழந்தைகள் பத்திரம்.. குழந்தைகள் பத்திரம்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிஜாதம் தற்கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாரிஜாதம் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் 194 பிஎன்எஸ் சட்டத்தின் 194-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அந்த கடிதத்தை பாரிஜாதம் தான் எழுதினாரா அல்லது வேறு யாராவது அந்த கடிதத்தை எழுதி வைத்து வழக்கை திசை திருப்புகின்றனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications