வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வார்.. பொள்ளாச்சி ஜெயராமன்
வேலூர்: மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
அதிமுக வெற்றி கூட்டணியின் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளரும், புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டவர் ஏ.சி.சண்முகம் என குறிப்பிட்டார்.
ஏற்கனவே சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்காக சிறப்பாக பணியாற்றியுள்ளார். மேலும் வேலூர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.
எனவே ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அமோக வெற்றி பெறுவார் என்றார் பொள்ளாச்சி ஜெயராமன்.
ஏ.சி.சண்முகத்தின் வெற்றிக்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எளிமையான முறையில் மக்களை சென்று சந்தித்து ஆதரவு கேட்டு வருவதாக குறிப்பிட்டார். மக்களும் எங்களை புன்முறுவலோடு வரவேற்று வாக்களிப்பதாக கூறியுள்ளனர்.
எனவே நிச்சயமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் உறுதியாக வெற்றி பெறுவார். மேலும் ஜெயலலிதா மறைந்தது முதலே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்தே சொந்த கட்சியினரை திமுக உற்சாகப்படுத்தி வருகிறது, அது அவர்களின் தலையெழுத்து.
திமுக-விற்கு இதை விட்டால் தற்போது வேறு வழியில்லை, 2021 சட்டமன்ற தேர்தல் வரை திமுக ஆட்சி மாற்றம் என்ற வாக்கியத்தை வைத்தே காலத்தை ஓட்டி விடும்.
மேலும் திமுக என்பது வாரிசு கட்சி என்பதை மக்களுக்கு தெளிவாக நிரூபித்து விட்டனர். எனவே தமிழகத்தில் இனி அக்கட்சி ஆட்சிக்கு வராது என பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்
வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக-விற்கு பெருவாரியான ஆதரவு உள்ளது. எனவே நிச்சயம் வேலூர் எங்களது வெற்றி கோட்டையாக மாறும் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.