கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு எங்கு விண்ணப்பிக்கலாம்? வேலூர் மாவட்ட அதிகாரிகள் தகவல்
வேலூர்: பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு எங்கு விண்ணப்பிக்கலாம்? என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ப பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும். இந்த சூழலில் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1,000 செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் விடுபட்ட தகுதியுடைய பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கலைஞர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க பலர் தயாராக உள்ளனர். ஆனால் எப்போது விண்ணப்பிக்கலாம், எங்கு மற்றும் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது.
இது குறித்து வேலூர் கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுடைய பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெற இருக்கிறது. அந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பம் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்து அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக வீடுதோறும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட பின்னரே இது குறித்த அறிவிப்பு அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications