தமிழக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் கேப்டன்?
சென்னை: தமிழகத்தில் பாஜக, மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேமுதிகவின் விஜயகாந்த் தலைமை ஏற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் திமுக தலை மையில் காங்கிரஸ், தேமுதிக கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாஜக-வுடன் தேமுதிக கை கோத்திருக்கிறது. இந்த அணியில் பாமக, மதிமுக கட்சிகளும் இணைந்திருக்கின்றன. கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, ஐஜேகே,புதிய நீதிக்கட்சி, ஆகிய கட்சிகள் இணைந்து பாஜக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக உருவெடுத்திருக்கிறது.

யாருக்கு எத்தனை தொகுதி
பாஜக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 12 முதல் 14 தொகுதிகள் கூடுதலாக ஒரு மாநிலங்களவை சீட், பாமக-வுக்கு 8 அல்லது 9 தொகுதிகள் கூடுதலாக ஒரு மாநிலங்களவை சீட் (இது டாக்டர் அன்புமணிக்காக ரிசர்வ் செய்யப்படலாம்), பாஜக-வுக்கு 8, மதிமுக-வுக்கு 6 முதல் 8 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

உதிரிக்கட்சிகளுக்கு சீட்
ஈஸ்வரனின் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, பச்சமுத்துவின் ஐஜேகே, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி என தொகுதிப் பங்கீடுகளின் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

விருதுநகரில் வைகோ
மதிமுக தரப்பில் தூத்துக்குடி, விருதுநகர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கடலூர், தேனி, பொள்ளாச்சி, ஈரோடு, திருச்சி, தென்காசி, ஆரணி, மத்திய சென்னை தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளதாம்.

தேமுதிகவின் தொகுதிகள்
தேமுதிக தரப்பில் ஆரணி, கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், வடசென்னை, தென் சென்னை, திருப்பூர் தொகுதிகள் கட்டாயம் தங்களுக்கு வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

திருச்சியில் பாஜக உறுதி
திருச்சி தொகுதியை தங்களுக்கு வேண்டும் என்று உறுதிபட தெரிவித்துவிட்டதாம் பாஜக. தவிர கன்னியாகுமரி உள்ளிட்ட தனக்கு சாதகமான தொகுதிகளை கூட்டணி கட்சியினரிடம் பாஜக தெளிவுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இறுதி வடிவத்தில் குழப்பம்
இதில் ஆரணியை ஏ.சி.சண்முகமும், தென் சென்னையை இல.கணேசனுக்காக பாஜக-வும் கேட்பதால் இன்னும் இறுதி வடிவம் எட்டப்படாமல் இருக்கிறது.

சேலம் தொகுதிக்கு போட்டி
பாரதிய ஜனதாவை பொறுத்தவரை தேர்தல் தேதி ஆரம்பிக்கும் முன்பு ஆடிட்டர் ரமேசின் குடும்ப உறுப்பினர்களை சேலம் தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என்று முடிவு செய்து இருந்தனர். ஆனால் கூட்டணி கட்சிகளான பா.ம.க-தே.மு.தி.க. இடையே சேலம் தொகுதியை பெறுவதில் ஆர்வம் காட்டி வருவதாலும் பாரதீய ஜனதா ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

தர்மபுரிக்கும் போட்டி
தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதிலும் தேமுதிக, பாமக இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரு கட்சியினருமே இந்த தொகுதியையும் குறிவைத்துள்ளனர். இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தே.மு.தி.க. 1 லட்சத்து 3 ஆயிரத்து 494 வாக்குகள் பெற்றுள்ளது. மேலும் தற்போது தர்மபுரி தொகுதி எம்.எல்.ஏ.வாக தே.மு.தி.க.வை சேர்ந்த பாஸ்கர் உள்ளார்.
எனவே இந்த தொகுதியிலும் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கியுடன் வெற்றி கனியை பறிக்கலாம் என்று தே.மு.தி.க. திட்டம் போட்டு இருக்கிறது.

தேமுதிக தலைமை
இதனிடையே, தமிழகத்தில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு தேமுதிகதான் தலைமை ஏற்கும் என்று விஜயகாந்த் ஏற்கெனவே அறிவித் திருந்தார்.
அந்த வகையிலும் தற்போது பாஜக கூட்டணியில் தேமுதிக-வுக்கு கூடுதலான தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதன் அடிப்படையிலும் பாஜக-வின் தமிழக கூட்டணிக்கு தேமுதிக தலைமை ஏற்கும் என்றும் சொல்லப்படுகிறது.

திங்கட்கிழமை அறிவிப்பு
அனேகமாக நாளை அல்லது திங்கள்கிழமை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தமிழகம் வரும்போது விஜயகாந்த் உள்ளிட்ட பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கூட்டாக அமர்ந்து கூட்டணி அறிவிப்பை முறைப்படி வெளியிடுவர் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications