“என் பின்னால் மக்கள் வர தயங்குவது ஏன் என தெரியவில்லை..” பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை
விழுப்புரம்: பாமக தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடியை தைலாபுரத்தில் ஏற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களுக்காகப் போராடினாலும் மக்கள் பாமகவை ஏற்க மறுப்பதாக வேதனை தெரிவித்தார். மேலும், ஏன் மக்கள் பாமகவுக்கு ஆதரவு அளிக்க மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாமக தொடங்கப்பட்டு 36வது ஆண்டை முன்னிட்டு திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும், பாமக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மக்களுக்காகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்தாலும் பாமகவைக் கோட்டைக்கு அனுப்ப மறுப்பதாகவும் சமூக நீதிக்காகப் போராடும் கட்சியாக உள்ள பாமக ஏற்க மறுக்கிறார்கள் அது ஏனோ என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
ராமதாஸ்: இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "பாமக இத்தனை ஆண்டுகளில் பல சாதனைகளைச் செய்துள்ளன. சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் ஆகிய 3 கொள்கைகளை உள்ளடக்கி சமூக ஜனநாயகம் என்ற உன்னதமான கொள்கை அடிப்படையில் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்காகப் பாடுபட்டு வருகிறோம். இனியும் பாடுபடப் போகிறோம்.
மறுக்கிறார்கள்: ஆனால், தமிழ்நாடு மக்கள் ஏனோ தெரியவில்லை.. பெரியளவில் ஆதரவு தரவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இதுபோன்ற கொள்கையுடன் கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழக மக்களுக்காகப் போராடி வருகிறேன். தமிழக மக்கள் எந்தவொரு பிரச்சினை என்றாலும் வருகிறார்கள்.. நான் தான் அதற்காக போராட்டம் நடத்துகிறேன்.. அறிக்கை விடுகிறேன்.
ஆனாலும், மக்கள் என் பின்னால் வர மறுக்கிறார்கள். தயங்குகிறார்கள். ஏன் எனத் தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் பாமக பின்னால், என் பின்னால் வரும் போது ஒரு ஒளிமயமான எதிர்காலம் தமிழகத்திற்குக் கிடைக்கும்.
மின்சார கட்டணம்: இப்போது மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். ஏற்கனவே தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த போகிறது எனக் கூறியிருந்தேன். நான் சொன்னது போலவே இப்போது உயர்த்திவிட்டனர். தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து தமிழக மக்களை வாங்கியவர்கள் தான் இவர்கள்.. தமிழக மக்கள் இவர்களுக்கு என்ன தண்டனை தரப் போகிறார்கள்.. தேர்தல் நேரத்தில் தரப்படும் பணம் உள்ளிட்ட விஷயங்களுக்கு அடிமையாகிப்போன தமிழக மக்களிடம் என்ன சொல்வது.. இப்படி தான் இவர்கள் செய்வார்கள். எல்லா கட்டணத்தையும் உயர்த்த தான் போகிறார்கள்.
தவறிவிடுகிறார்கள்: மக்களுக்காக இதுவரை நாங்கள் பல வகையான போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், தேர்தல் நேரத்தில் நல்ல நேர்மையான கட்சியைக் கோட்டை அனுப்ப மக்கள் தவறிவிடுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications