விழுப்புரம் வராகி கோயிலுக்கு சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு! மீட்க உதவுமாறு உருக்கமாக வீடியோ
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புக்குழுவினர் மீடு வருகின்றனர். இதனிடையே, வராகி கோயிலுக்கு சென்ற 20 பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதாகவும் தங்களை மீட்க அரசு உதவ வேண்டும் எனவும் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் புதுவை மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம் நகரம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகப்பட்சமாக 51 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் தீவுபோல் காட்சியளிக்கிறது. அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மரக்காணத்திலும், 5 மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் இவர்களுடன் காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் இணைந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், குச்சிப்பாளையம், பேரங்கியூர், நன்னாடு, பெரும்பாக்கம், காணை, மாம்பலப்பட்டு, காங்கேயனூர், கல்பட்டு, சோணங்கிப்பாளையம், கோலியனூர், நன்னாட்டம்பாளையம், பஞ்சமாதேவி, செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், வானூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
புயல் கரையை கடந்தபோதிலும் தொடர்ந்து மழை பெய்ததால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர் வடியவில்லை. இதனிடையே கனமழையினால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பியதால் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் மேலும் பாதிக்கப்பட்டனர். குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கிய நிலையில் இடையிடையே மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இன்றும் விழுப்புரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு இடங்களில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியில் உள்ள வராகி கோவிலுக்கு சென்றவர்கள், கோயிலை சுற்றி வெள்ள நீர் ஓடுவதால் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்துள்ளனர். சுமார் 20 பக்தர்கள் கோயிலில் சிக்கியுள்ள நிலையில் தங்களை மீட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றிலும் வெள்ள நீர் அடித்து செல்லும் நிலையில் தங்களை எப்படியாவது மீட்குமாறு அவர்கள் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications