காதல் திருமண சர்ச்சை.. திருமணப்பதிவின் போது பெற்றோர் பங்கேற்பு அவசியம்.. வன்னியர் சங்கம் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: பெண்களின் பாதுகாப்பு, குடும்பங்களின் நம்பிக்கை மற்றும் சமூக ஒழுங்கை உறுதிப்படுத்தும் இந்த நடைமுறையை பலவீனப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள அமைச்சர் யோகேஷ் தமிழ்ச்செல்வனின் கருத்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். பெண்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கில், திருமணப் பதிவு நடைமுறைகளில் பெற்றோர் பங்கேற்பை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் சார்பில் வலியுறுத்துகிறேன் என வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி கூறியுள்ளார்.

வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் .யோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள், வெளியிட்ட அறிவிப்பில் திருமணப் பதிவு செய்யும் போது மணமகன் மற்றும் மணமகள் பெற்றோர் நேரில் ஆஜராக வேண்டுமென வலியுறுத்தக் கூடாது என்றும், பெற்றோர்கள் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தியதாக சார்- பதிவாளர்கள் அலுவலர்கள் மீது புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Parental participation

திருமணம் என்பது வெறும் சட்டப்பூர்வ ஒப்பந்தம் மட்டுமல்ல; அது தமிழர் பண்பாடு, குடும்ப மரபு மற்றும் சமூகப் பொறுப்புடன் தொடர்புடைய ஒரு புனிதமான சடங்காகும். பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்று, பின்னர் சட்டப்படி பதிவு செய்யப்படுகிறது.

தற்போதைய சமூக சூழலில், பல இளம் பெண்கள் கல்லூரி, வேலைவாய்ப்பு மற்றும் பிற காரணங்களால் வெளியுலக தொடர்புகளில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் சிலர் காதல், திருமணம் போன்ற பெயர்களில் பெண்களை ஏமாற்றி, அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரியாமல் திருமணப் பதிவு செய்து கொள்ளும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளன. இதன் காரணமாக ஏராளமான பெண்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் உண்மையான திருமணச் சடங்குகள் கூட நடைபெறாமல், பதிவுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

இத்தகைய சூழ்நிலைகளில், திருமணப் பதிவின் போது பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உடனிருப்பது பெண்களின் பாதுகாப்பிற்கான முக்கியமான உத்தரவாதமாக விளங்குகிறது. இது ஒரு குடும்பத்தின் அறிவு மற்றும் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுவதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், மோசடி, ஏமாற்று மற்றும் கட்டாயத் திருமணங்கள் போன்றவற்றையும் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடாக உள்ளது.

சட்டப்படி வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை கொண்டவர்கள் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த உரிமையை பாதுகாப்பாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. குறிப்பாக பெண்களின் எதிர்கால நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, திருமணப் பதிவு நடைமுறைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்.

எனவே, திருமணப் பதிவின்போது மணமக்களின் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உடனிருக்க வேண்டும் என்பதையும், அவர்களின் அடையாள உறுதிப்படுத்தலுடன் சாட்சிக் கையொப்பம் பெறப்பட வேண்டும் என்பதையும் தமிழக அரசு கட்டாய நடைமுறையாக அறிவிக்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் வலியுறுத்துகிறது.

பெண்களின் பாதுகாப்பு, குடும்பங்களின் நம்பிக்கை மற்றும் சமூக ஒழுங்கை உறுதிப்படுத்தும் இந்த நடைமுறையை பலவீனப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள அமைச்சரின் கருத்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். பெண்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கில், திருமணப் பதிவு நடைமுறைகளில் பெற்றோர் பங்கேற்பை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு அய்யா அவர்கள் சார்பில் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+