பாமகவிற்கு நல்ல செய்தி வருகிறதா? இன்று காலை தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் முக்கிய மீட்டிங்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ்-அன்புமணி இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாமகவினருக்கு நல்ல செய்தி வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக பாமக மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் கடந்த மே மாதம் 16ம் தேதி நடந்தது. அந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ராமதாஸ் பேரனும் மாநில இளைஞர் அணி தலைவருமான முகுந்தன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றிருந்தார்கள். மற்ற அனைவரும் புறக்கணித்து விட்டார்கள்.

அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், எம்எல்ஏக்கள் மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம் ஆகிய 3 பேர் மற்றும் மாநில பொருளாளர் திலகபாமா உட்பட 80 சதவீத நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. இதனால் வருத்தம் அடைந்த ராமதாஸ், பல்வேறு கட்சி நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்தார். பதிலுக்கு அன்புமணியும் கட்சி நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்தார். இருவரும் நீக்குவதும், சேர்ப்பதும் என மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
கடந்த ஜூலை 3ம் தேதி தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, எம்எல்ஏ அருளை நீக்கியது தொடர்பாக செய்தியார்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த ராமதாஸ், நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. எம்எல்ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமக கொறடாவாக அருள் தொடர்வார் என்றார்.
ஜி.கே.மணி மூலம் சபாநாயகருக்குக் கடிதம் கொடுத்துத்தான் கொரடா அருளை நீக்க இயலும். அருளுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர், இணைப்பொதுசெயலாளர் பொறுப்பையும் வழங்கி உள்ளேன். பாமகவை நான்தான் வளர்த்தேன். இந்த ஜனங்களுக்காக நான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். என்னுடைய மனது வேதனைப்படும் அளவிற்குச் சில செய்திகள், சிலரின் செயல்கள் தொடர்ந்து இருக்கின்றன. இருந்தாலும் அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு தொடர்ந்து இந்தக்கட்சியை வழிநடத்துவேன்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் உள்கட்சி பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு பாமக நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications