ராமதாஸ் செல்போன் ஹேக்.. தைலாபுரம் வீட்டுக்கும் குறி.. வைபை மூலம் பக்கா ஸ்கெட்ச்
விழுப்புரம்: வாரிசு அரசியல் புகார் சுழன்றடித்துக் கொண்டிருந்த பாமகவில் தற்போது அதுவே பூதாகரமாகியுள்ளது. ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் பாமகவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தன் வீட்டில் அன்புமணி ஒட்டு கேட்கும் கருவி வைத்ததாக ராமதாஸ் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் வைபை மூலம் தன்னுடைய செல்போன் மற்றும் வீட்டு சிசிடிவி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளது என ராமதாஸ் காவல்துறையில் மேலும் ஒரு புகாரை கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாமகவில் தந்தை, மகன் இடையேயான பனிப்போர் வெடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த மோதல் கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்து வருகிறது.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
பாமக இரண்டாக பிரிந்து ராமதாஸ் தலைமையில் ஒரு டீமும், அன்புமணி தலைமையில் ஒரு டீமும் செயல்பட்டு வருகிறார்கள். முதலமைச்சரிடம் நலம் விசாரிப்பது, நிர்வாகிகளை மாற்றுவது, மாநாடு, பொதுக்குழு அறிவிப்பு என்று பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதேபோல அன்புமணியும் நடைபயணம், பேரணி, மாநாடு என்று தனி டிராக்கில் பயணிக்கிறார்.
இருவரையும் சமாதானப்படுத்த பாமக நிர்வாகிகள் பலர் பல்வேறு முயற்சிகளில் இறங்கினார்கள். தொடர்ந்து ராமதாஸ், அன்புமணி இடையே பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் அதில் தீர்வு கிடைக்கவில்லை. தற்போது சமாதான பேச்சுவார்த்தைகள் நின்று, பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள்.
வேவு பார்த்த புகார்
அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த ராமதாஸ், தன் வீட்டில் அவர் ஒட்டு கேட்கும் கருவி வைத்ததாகவும் கூறியிருந்தார். இதுதொடர்பாக ராமதாஸ் தரப்பில் புகார் அளித்து, அந்த ஒட்டு கேட்கும் கருவியை காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தனர். அன்புமணி தன்னை வேவு பார்ப்பதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
ராமதாஸ் யாரிடம் என்ன பேசுகிறார் என்று கண்டறிய இப்படி ஒட்டு கேட்கும் கருவி வைத்ததாக புகார் கூறியிருந்தனர். இந்த புகார் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மகனே தந்தையை உளவு பார்க்கிறாரா என்று விவாதமும் நடைபெற்றது. ஒட்டு கேட்பு கருவி மட்டுமல்ல, ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி கேமரா தொடங்கி அவரின் செல்போன் வரை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக மேலும் ஒரு புகார் அளித்துள்ளார்.
செல்போன், சிசிடிவி ஹேக்
இதுதொடர்பாக ராமதாஸ் தரப்பில் கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், தைலாபுரம் பகுதியில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் வை-பை மூலம் சட்டவிரோதமாக செல்போன் மற்றும் சிசிடிவி ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் நிறுவனத்தில் ஆய்வு செய்ததில் ஹேக் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாகவே ராமதாஸ் யார் யாரை சந்திக்கிறார் என்றும், அவரின் செல்போன் உரையாடல்களும் ஹேக் செய்யப்பட்டு வருகின்றன. உடனடியாக ஹேக் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications