விழுப்புரத்தில் இரவு திடீரென நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. நடு வழியில் நின்றதால் பயணிகள் அவதி
விழுப்புரம்: சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற முத்து நகர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் விழுப்புரத்தில் நேற்று இரவு நிறுத்தப்பட்டது. சுமார் 40 நிமிடங்கள் வரை ரயில்கள் தாமதாக புறப்பட்டு சென்றன.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் விழுப்புரம் ரயில் நிலையத்தைத்தான் கடந்து செல்கின்றன. கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ், நெல்லை, எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ் என தென் மாவட்டங்களுகுக் செல்லும் ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். திருச்சி, மதுரை உளிட்ட முக்கிய நகரங்களை கடந்து செல்லும் இந்த ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.

பொதுப்பெட்டியிலும் கடுமையான கூட்டம் காணப்படும். வார நாட்களிலும் பயணிகள் கூட்டத்திற்கு கொஞ்சமும் குறைவு இருக்காது. சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு வழக்கம் போல ரயில்கள் சென்று கொண்டிருந்த நிலையில், சிக்னல் கோளாறால் சுமார் அரை மணி நேரம் வரை தாமதம் ஆனது. அதாவது, சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி புறப்பட்ட முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 10.05 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தது.
10.15 மணிக்கு இந்த ரயில் புறப்பட இருந்த நிலையில், சிக்னலும் போடப்பட்டது. அப்போது பாயிண்ட் ஃபெயிலியர் ஏற்பட்டதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவது நிறுத்தப்படது. விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் சிக்னல் கோளாறை சரி செய்ய கடும் முயற்சி செய்தனர். சுமார் 40 நிமிட போராட்டத்திற்கு பிறகு பாயிண்ட் கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து முத்துநகர் ரயில் புறப்பட்டு சென்றது.
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நின்றதால் அடுத்தடுத்து வந்த ரயில்கள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. அதேபோல், கம்பன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் சிறப்பு ரயில், செங்கோட்டை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களும் தாமதம் ஆனது. ரயில்கள் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் காலையில் சரியான நேரத்திற்கு செல்ல முடியுமா? என பயணிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். சுமார் அரை மணி நேரம் வரை தாமதம் ஆன நிலையில் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன. அதன்பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.












Click it and Unblock the Notifications