காலை பிடித்துவிட்ட ஆளுநர்.. மேடையில் திடீரென ஸ்லிப் ஆன பெண்ணுக்கு பதறி ஓடி முதலுதவி செய்த தமிழிசை!
விழுப்புரம் : மேடையில் ஏறும்போது தவறி விழுந்த பெண்ணுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சௌந்தரராஜன் முதலுதவி செய்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ள ஆரோவில் நகரத்தில், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ், சுத்தப்படுத்தும் பணிகள் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழா ஆரோவில் பாரத் நிவாஸ் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
அப்போது, பெண் ஒருவர் மேடை ஏறும்போது தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. உடனே ஓடிச் சென்று அவரை தாங்கிப் பிடித்தார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். மேலும், மருத்துவரான தமிழிசை, அப்பெண்ணின் காலை பிடித்துவிட்டு முதலுதவி செய்தார்.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், மேடையில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு தானே முதலுதவி செய்த இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.