விஜய் கட்சி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை! என்ன விஷயம்
விழுப்புரம்: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிலையில், இதற்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் இப்போது கிட்டதட்ட நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே விஜய் கட்சி மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு மின்வாரியம் சார்பில் முக்கியமான சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் விஜய்.. இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த தி கோட் திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிகர்கள் அரசியலுக்கு வருவது வழக்கம் தான். எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி பலரும் திரைத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் தான். அந்த லிஸ்டில் விஜய்யும் இணைந்துள்ளார்.
விஜய் கட்சி: கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வருவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விஜய் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளார். கட்சி நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து வந்தாலும் கூட, இன்னும் ஒரு படத்தில் நடிக்க வேண்டி இருப்பதால் அதிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஹெச் வினோத் இயக்கும் அந்த படம் அடுத்தாண்டு பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு விஜய் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க விஜய் கட்சி இப்போது முதல் மாநாட்டிற்குத் தயாராகிவிட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி சாலைப் பகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த மாநாடு நடைபெறுகிறது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவு இந்த இடத்தில் நான்கு பார்க்கிங், 85 ஏக்கரில் மாநாட்டுத் திடல், 100 அடி கொடிக்கம்பம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விஜய் மாநாடு: கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்ட நிலையில், இப்போது பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிக்க பல்வேறு நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். உணவு, குடிநீர், கழிப்பிடம், மருத்துவம் என்று பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாநாடு நடக்கும் இடத்தில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த தலைவர்களின் கட் அவுட் உடன் விஜயின் படமும் இடம்பெற்றுள்ளது.
மின் வாரியம்: இதற்கிடையே விஜய் மாநாடு நடக்கும் நிலையில், தவெக தொண்டர்களுக்கு சில அறிவுறுத்தல்களை மின்வாரிய தலைமை பொறியாளர் மணிமேகலை வழங்கியிருக்கிறார். விஜய் கட்சி மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், வாகனங்களின் மேல் அமர்ந்து கொடி பிடித்து வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதேபோல தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு மின்வாரியத்தில் இருந்து மின்சாரம் பெறவில்லை என்றும் மாநாட்டிற்கு ஜெனரேட்டர் மின்சாரமே முழுமையாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், மின் வாரியத்திற்கு பணம் செலுத்தியதால் மாநாட்டுத் திடலில் இருந்த மின் கம்பிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது ஒரு பக்கம் இருக்க தவெக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் ஆய்வு செய்தார். மாநாட்டிற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டுள்ளதாக என்பது குறித்து ஆய்வு செய்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications