''நான் கலைஞரின் பேரன்... யாருக்கும் பயப்பட மாட்டேன்''... பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி: நான் கலைஞரின் பேரன் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சசிகலா வருவார் என்ற காரணத்திற்காகவே திறக்கப்பட்ட சில நாட்களிலேயே ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
வருகிற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உயிரை பறிக்கும் நீட்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். களமருதூர் கடைவீதியில் அவர் பேசியதாவது:- நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நான்கு மாணவர்கள் நீட் தேர்வுக்கு பயந்து தங்களது உயிரை பறிகொடுத்துள்ளனர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
ஜெயலலிதா மறுப்பு
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நீட் தேர்வு வேண்டாம் என்று கூறினார். ஆனால் தற்போதய ஆட்சியில் நீட் தேர்வு தொடர்ந்து நடந்து வருகிறது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உழைத்து படிப்படியாக முன்னுக்கு வந்ததாக கூறுகிறார். அவர் எப்படி வந்தார் என்று எல்லாருக்கும் தெரியும். நான் கலைஞரின் பேரன் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.
ஜெயலலிதா நினைவிடம் திட்டமிட்டே மூடல்
ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்ட பின்னர் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா செல்வார் என்று தெரிந்து ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட்டுள்ளது.ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அரை மணி நேரம் உட்கார்ந்துவிட்டு தியானம் செய்ததாக கூறி விட்டு பின்னர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறியவர்தான் பன்னீர்செல்வம்.
யார் பலன் அடைந்தனர்?
பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் யார் பலன் அடைந்தார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். திமுக ஆட்சி அமைந்தவுடன் உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்துக் கொடுக்கப்படும், பொதுமக்களின் நலன் கருதி களமருதூரில் காவல் நிலையம் அமைக்கப்படும். வருகிற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.