விக்கிரவாண்டி தொகுதிக்கு இப்படியொரு ராசியா? 13 ஆண்டுகளில் 5வது முறையாக MLAவை தேர்வு செய்யும் மக்கள்!
விழுப்புரம்: 13 ஆண்டுகளில் 5வது முறையாக சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய இருக்கின்றனர் விக்கிரவாண்டி வாக்காளர்கள். ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ ராதாமணி மறைவால் 2019ல் இடைத்தேர்தல் நடந்தது. தற்போது புகழேந்தி மறைவால் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
2007 ஆம் ஆண்டு தொகுதி மறு வரையறைக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட சட்டசபை தொகுதி விக்கிரவாண்டி. 2011 ஆம் ஆண்டு தான் விக்கிரவாண்டி தொகுதி முதன் முதலாக தேர்தலைச் சந்தித்தது. 13 ஆண்டுகளுக்குள் தற்போது ஐந்தாவது முறையாக சட்டமன்ற உறுப்பினரை விக்கிரவாண்டி வாக்காளர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் புகழேந்தி. விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார். பொன்முடிக்கு நெருக்கமான புகழேந்தி, புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி விழுப்புரத்தில் நடந்த முதல்வரின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த புகழேந்தி, அங்கு மயங்கி விழுந்தார். மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி 2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 93,730 வாக்குகளைப் பெற்று திமுகவுக்கு வெற்றிக்கனியைப் பறித்துத் தந்தார். திமுக அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தில், உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புகழேந்தி மறைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அரசிதழில் வெளியிட்டப்பட்டது. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களில் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அந்தவகையில் தற்போது இடைத்தேர்தலை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும், ஜூன் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 முதல்: விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக கூட்டணியில் சிபிஐ (எம்) சார்பில் 2011 ஆர். ராமமூர்த்தி 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016ல் திமுக வேட்பாளர் ராதாமணி சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் காலமான நிலையில் 2019ல் அங்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் முத்தமிழ்ச்செல்வன் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தி 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். 3 ஆண்டுகளில் அவர் காலமான நிலையில், அங்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் பதவிக் காலத்திலேயே தனது 2 சட்டமன்ற உறுப்பினர்களை இழந்துள்ளது திமுக.
புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டு 13 ஆண்டுகளே ஆகும் நிலையில், 5வது முறையாக தேர்தலைச் சந்திக்கிறது விக்கிரவாண்டி. இதுவரை விக்கிரவாண்டியில் 3 முறை சட்டசபை பொதுத்தேர்தலும், 1 முறை இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. தற்போது 2வது முறையாக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக, 5 ஆண்டுகளுக்குள் 2 இடைத்தேர்தல் உட்பட இதோடு 3 தேர்தல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications