ஒரு மாசத்துக்குள்ளயேவா? விறுவிறுப்பாகும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்! பாமக வேட்பாளர் யார் தெரியுமா?
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ புகழேந்தி திடீர் மரணமடைந்த நிலையில் காலியானதாக அறிவிக்கப்பட்ட அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கு மீண்டும் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இறங்கும் பட்சத்தில் யார் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என பார்க்கலாம்..
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்தபோது தான் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்த போதும் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6ஆம் தேதி புகழேந்தி காலமானார். அவரது மரணத்தை தொடர்ந்து அந்த தகவலை தமிழ்நாடு சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது. இதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையமும் அறிவித்திருந்தது
தேர்தல் ஆணையம்: ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் ஏழாம் கட்ட தேர்தலோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் தேதி அப்போது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில் விக்கிரவாண்டி உள்ளிட்ட 13 தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதி: அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 14ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஜூன் 21ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
திமுக வேட்பாளர்கள்: வாக்குப்பதிவுக்கு 30 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அவசர அவசரமாக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. திமுக சார்பில் விக்கிரவாண்டி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், விவசாய அணி துணைச் செயலாளரான அன்னியூர் சிவா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மறைந்த எம்எல்ஏ புகழேந்தியின் மகனான செல்வகுமார் ஆகிய ஐந்து பேரில் யாராவது ஒருவர் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக வேட்பாளர்கள்: இதே போல அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகத்தை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், காணை மேற்கு ஒன்றிய செயலாளரும் விக்கிரவாண்டி முன்னாள் எம்எல்ஏவும் ஆன முத்தமிழ் செல்வன் ஆகியோர் களம் இறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பாமக வேட்பாளர்: இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அந்த தொகுதியில் வன்னியர் அதிகம் வசிப்பதால் பாமகவுக்கு நல்ல வாக்கு வங்கி இருக்கிறது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளரும் தற்போது சங்கத்தின் மாநில துணைத்தலைவராக இருக்கும் அன்புமணி களமிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இறுதி முடிவு: இதேபோல், பாமக விழுப்புரம் மாவட்ட தலைவர் தங்ஜோதி, விழுப்புரம் மாவட்ட முன்னாள் செயலாளரான புகழேந்தி ஆகிய மூவரில் யாராவது ஒருவர் களமிறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட சிலரும் தலைமையால் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என பாமகவினர் கூறியுள்ளனர். இறுதி முடிவை ராமதாஸும் அன்புமணி ராமதாசும் தான் எடுப்பார்கள் என்பதால் பரபரப்பு எகிறியுள்ளது.












Click it and Unblock the Notifications