திராவிடம் இருப்பதால்தான் பிற்போக்கு கும்பல்களால் இங்கு தலைதூக்கவே முடியவில்லை.. ஸ்டாலின் பேச்சு!
விழுப்புரம்: "எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட கருத்தியல். இதனால்தான் இது 'ஸ்டாலின் ஆட்சி' என்று தற்பெருமை தேடாமல், திரும்பத் திரும்ப 'திராவிட மாடல் ஆட்சி' என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன்"
என விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதனைத் தொடர்ந்து வழுதரெட்டியில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதிப் போராளிகளை போற்றும் வகையில், ரூ.5.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் திருவுருவச் சிலையுடனான நினைவு அரங்கத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வீரத்தின் விளைநிலம் விழுப்புரம். திராவிட இயக்கத்தின் தலைமகனாக திகழ்ந்தவர் மறைந்த கோவிந்தசாமி. கோவிந்தசாமி நினைவு அரங்கத்தை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை. 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
21 சமூகநீதி போராளிகள் 1987-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை உருவாக்கி 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற 43வது நாளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார்.
வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்தது திமுக ஆட்சியில்தான். தற்போது சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கம் தோன்றியதே சமூக நீதியை நிலைநாட்ட தான். இட ஒதுக்கீட்டிற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது திமுக.
என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதல்வர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு. எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான். அன்னைத் தமிழுக்கு சிறப்புச் சேர்த்ததும், நவீன தமிழ்நாட்டை உருவாக்கியதும் திராவிடம்தான்.
ஸ்டாலின் ஆட்சி என்று கூறி தற்பெருமை தேடாமல், திரும்ப திரும்ப 'திராவிட மாடல் ஆட்சி' என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வதற்கு இதுதான் காரணம். திராவிடம் இருப்பதால்தான் நாட்டின் பிற்பகுதியில் இருப்பதுபோல, ஆதிக்க சக்திகளின் பிற்போக்கு கும்பல்களால் இங்கு தலைதூக்க முடியவில்லை. அதனால்தான் போலிகள், துரோகிகள் துணைகொண்டு எதிரிகள் பலமுனை தாக்குதல் நடத்தி நடத்தி சோர்ந்து போகிறார்கள். அதனால்தான், பல்வேறு விமர்சனங்கள்
வந்தாலும் திரும்பத் திரும்ப 'திராவிட மாடல் ஆட்சி' என்றுதான் சொல்வேன்." எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications