அப்படியே எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சீங்க.. கேள்வி கேட்க வந்துட்டீங்க.. மீண்டும் சர்ச்சையில் பொன்முடி
எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க, இப்ப கேள்வி கேட்கறீங்க, என மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
விழுப்புரம்: எனக்கு நீங்க ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க, இப்ப வந்து கேள்வி கேட்கிறீங்க என மீண்டும் ஒரு முறை சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
திமுக அமைச்சர்கள் அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்கள். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் ஒரு பட்டியலின அதிகாரியை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் அவரிடம் இருந்த போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வழங்கப்பட்டது. அது போல் அமைச்சர் பொன்முடி கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் மணம்பூண்டி புதுநகர் பகுதியில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

பொன்முடி
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த விழாவில் பேசுகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்களை மாதந்தோறும் சரியான எடையில் தரமானதாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள்
அந்த வகையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திமுக அரசு நிறைய திட்டங்களை செய்துள்ளது என கூறினார். அப்போது திடீரென மேடையில் இருந்த முகையூர் ஒன்றியக் குழு தலைவரை அறிமுகப்படுத்தி பேசும் போது நீங்கள் எஸ்சி தானே என கேட்டார். அதற்கு அவரும் ஆமாம் என கூறினார். இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னை கூட்டம்
அது போல் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசினார். எல்லாரும் பேருந்தில் எப்படி போறீங்க, கோயம்பேடுனு இல்ல எங்க போனாலும் ஓசில தானே போறீங்க என கூறி சர்ச்சையை கிளப்பினார். இது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாங்களா இலவச பஸ் பயணத்தை கேட்டோம், நீங்கள் தானே கொடுத்தீர்கள். எதற்காக எங்களை ஓசி என கூறி கேவலப்படுத்துகிறீர்கள் என பல பெண்கள் கேள்வி எழுப்பினர்.

மன்னிப்பு கேட்ட பொன்முடி
இதையடுத்து அமைச்சர் பொன்முடி, தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. யார் மனம் புண்பட்டிருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார். இந்த சம்பவத்திற்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொழுது விடிந்தால் யார் புதிய பிரச்சினையை கொண்டு வருவார்களோ என்பதை நினைத்தால் இரவில் தூக்கமே வருவதில்லை என வேதனை தெரிவித்தார்.

தொடர் சர்ச்சை
ஆயினும் அமைச்சர்கள், நிர்வாகிகளின் சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. திமுக பொது கூட்டத்தில் சைதை சாதிக் பாஜகவில் உள்ள 4 நடிகைகளை தவறான பொருள்படியான கருத்தை கூறி பின்னர் நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையம் சென்றதும் அங்கு மன்னிப்பு கேட்டார். பின்னர் எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒரு திமுக நிர்வாகி பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாசர்
கடந்த மாதம் அமைச்சர் சா.மு. நாசர் கற்களை தூக்கி பொதுமக்கள் மீது வீசினார். இவ்வாறு சர்ச்சைகள் தொடரும் நிலையில் அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிக்குள்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது.

சாலை வசதி
இந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, உங்கள் கிராமத்தில் சாலை வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை நான்தான் செய்து கொடுத்தேன் என்றார். அப்போது அங்கிருந்த மக்கள் நீங்கள் எதையும் செய்து தரவில்லை என கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த பொன்முடி, ஆமா இந்த அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சிட்டீங்க, கேட்க வந்துட்டீங்க போய் உட்காருங்க. நான் எப்போ வந்தாலும் இந்த அருங்குறிக்கையில் இப்படிதான் கத்துவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் என்றார். ஆனால் மக்கள் மேலும் மேலும் கூச்சலிட்டதால் தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு கிளம்பினார்.












Click it and Unblock the Notifications