கொடைக்கானலில் டூர்.. சினிமா பாணியில் தாலி கட்டிய காலேஜ் ஸ்டூடண்ட்.. தாலியின் ஈரம் காயும் முன் கொடுமை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவரை காதலித்து மணந்த இளம்பெண்னை ஏற்காமல் தாலியை பறித்து விரட்டியடித்துள்ளார்கள். இந்த கொடுமையை தாங்க முடியாமல் அந்த பெண் விஷம் குடித்தார். அவர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரம் கிராமத்தை சேர்ந்த 20 வயதாகும் மாரீசுவரி பிளஸ் 2 படித்துள்ளார். இவர் தனது கிராமத்தை ஒட்டிய பகுதியில் இயங்கி வந்த தனியார் நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தார்.

மாரீசுவரி பிளஸ்-2 படித்தபோது, தென்காசி மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த சசிகுமார் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சசிகுமார் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம், 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகை கொண்டாட சசிகுமார் ஊருக்கு வந்துள்ளார். அப்போது மாரீசுவரியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கொடைக்கானலுக்கு சென்றிருக்கிறார். அங்குள்ள விநாயகர் கோவிலில் வைத்து மாரீசுவரி கழுத்தில் சசிகுமார் தாலி கட்டியிருக்கிறார். பின்னர் மாரீசுவரி சசிகுமார் தம்பதி கொடைக்கானலிலேயே தங்கி உள்ளார்கள்.
அண்மையில் கொடைக்கானலில் இருந்து அவர்கள் திரும்பினர். மாரீசுவரியை தனது வீட்டிற்கு அழைத்து செல்லாமல் தென்காசி மாவட்டம் பாச்சேரி கிராமத்தில் உள்ள தனது சித்தி முனியம்மாள் வீட்டில் காதலியை விட்டுவிட்டு, சசிகுமார் மட்டும் தனது வீட்டிற்கு வந்திருக்கிறார்.
காதல் திருமணத்தில் பிரச்சினை ஏற்பட்டால், தனது பாட்டி மூலம் தீர்வு கண்ட பிறகு, காதலியை அழைத்துச் செல்வதாக சசிகுமார் கூறியுள்ளார்.
பின்னர், கொடைக்கானலில் திருமணம் செய்து கொண்ட விவரத்தை சசிகுமார் தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார் ஆனால் அவரது பெற்றோர் காதல் திருமணத்தை ஏற்கவில்லை. உடனடியாக சசிகுமார் குடும்பத்தினர், முனியம்மாளுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து மாரீசுவரியை வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு எச்சரித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகுமார் மீண்டும் பாச்சேரி கிராமத்திற்கு சென்றார். அப்போது அவரது சித்தி, சசிகுமாரை தனி அறையில் அடைத்து வைத்துவிட்டு மாரீசுவரியை மிரட்டி கழுத்தில் உள்ள தாலியை பறித்து வீசியதுடன், வீட்டை விட்டு வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாரீசுவரி சோழபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழுது கொண்டே போயிருக்கிறார். பின்னர் மாரீஸ்வரி பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி கதறி அழுதுள்ளார். இந்தநிலையில் தனது காதலை ஏற்காமல் தாலியை பறித்து தன்னை விரட்டிவிட்டதால், மனம் உடைந்த மாரீசுவரி மருந்தை குடித்துள்ளார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீசார் விசாரணை நடத்திய போது தான், சசிமாரின் சித்தி, மாரீஸ்வரியை இளம்பெண்ணை மிரட்டி தாலியை அறுத்து வீசி அவமானப்படுத்தியது உறுதியானது. இதையடுத்து சசிகுமாரின் சித்தி முனியம்மாள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications