வேலியே பயிரை மேய்ந்த கதை.. அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடிய போலீசார் கைது.. மக்கள் ஷாக்!
விருதுநகர்: சாத்தூரில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடிய காவலரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கடந்த 2019-ம் ஆண்டு இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.

டிரைவர் வீடு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முருகன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாண்டியன் (35). இவரது மனைவி சங்கீதா (30).லோடு வண்டி டிரைவராக பணிபுரியும் பாண்டியன் லோடு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி சென்றுள்ளார். இவரது மனைவி சங்கீதா தீப்பெட்டி ஆபீஸிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடித்து வீடு திரும்பிய சங்கீதா வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.வீட்டின் பீரோ கதவும் திறந்து கிடைத்தது..

மக்கள் அதிர்ச்சி
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.4,500 பணம், ஒன்றரை கிராம் தாலியும் திருடு போனது தெரியவந்தது. சங்கீதாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஜயலட்சுமி (29) என்பவரது வீட்டின் கதவை உடைத்தும் அலமாரியிலுள்ள ரூ.400 பணம் திருடு போயிருந்தது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (37) என்பவர் வீட்டிலும் பீரோவை உடைத்து ரூ.3,500 திருடு போனது தெரியவந்தது. அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு போனதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னாள் காவலர்
இதனையடுத்து இந்த பகுதியில் சந்தேகத்தின் பெயரில் சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து சாத்தூர் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த கற்குவேல் (29) என்பதும் ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்ததும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

போலீசார் விசாரணை
இவர் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கடந்த 2019-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வீடுகளில் திருடுவதை முழு தொழிலாக வைத்துள்ளார் கற்குவேல். சாத்தூர் நகர் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் நகை மற்றும் பணம் திருடியதும் இவர் தான் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. கற்குவேலை கைது செய்த சாத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications