அன்னபூர்ணா விவகாரம்! இது நியாயமா மேடம்? எப்போ நிறுத்துவீங்க! நிர்மலாவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி
விருதுநகர்: அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது மத்திய அரசின் அகங்காரத்தின் அடுத்த நிலையாகும். இந்த செயல்பாடு ஜிஎஸ்டி வரி கட்டும் தொழில் முனைவோர்களை மிரட்டுவதற்கான ஆதாரமாகவே கருதுகிறோம் என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஈஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிவகாசி ஈஎஸ்ஐ மருத்துவமனையின் தரம் மிகக் குறைந்த அளவில் உள்ளது.
அரசு மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வரும் பார்வை மாற வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநட்டும் முதல்வரின் நேரடி பார்வையில் உள்ள காவல் துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் காவல் துறையின் பணி சிறப்பாக உள்ளது.
ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட மத்திய அரசின் அகங்காரத்தின் அடுத்த நிலை. இந்த செயல்பாடு இந்தியா முழுவதும் உள்ள ஜிஎஸ்டி வரி கட்டும் தொழில் முனைவோர்களை மிரட்டுவதற்கான ஆதாரமாகவே கருதுகிறோம்.
பெரிய, நடுத்தர அளவிலான தொழில் செய்பவர்களை மிரட்டும் மத்திய அரசு அதானி- அம்பானி தவிர மற்றுமுள்ள தொழில் முனைவோர்களை மத்திய அரசு மிரட்டி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதற்கு நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்க வேண்டும். இந்த பிரச்சினை பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டை அரசியலாக்குவது தவறானது. மதவாத, ஜாதிவாரி கட்சிகள் தவிர மற்ற அனைவருக்கும் மாநாட்டில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பல் அழைப்பு விடுக்கபப்ப்டது வரவேற்கத்தக்கது. இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இது நியாயமா மத்திய அமைச்சர் மேடம்? ஒரு தொழிலதிபரை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைப்பது போன்ற விவகாரங்களை நீங்கள் எப்போது நிறுத்துவீர்கள். ஆணவம் அனைத்துக்கும் முடிவு கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications