அந்த 20,000 குடும்பங்கள்.. திமுக ஓட்டை பிரிக்கும் உமாதேவி.. இறங்கி வேலை செய்தால் அதிமுக தலைதப்பும்?
விருதுநகர்: நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அருப்புக்கோட்டைத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு சவாலாகி இருக்கிறார் மக்கள்நீதி மய்ய வேட்பாளர் உமாதேவி.
கோடை வெயில் ஆரம்பமாகும் முன்னரே தமிழ்நாட்டில் வெப்பம் தகிக்க தொடங்கிவிட்டது. காரணம் அரசியல் கட்சியினரின் அனல் பறக்கும் பிரச்சாரம். அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தனக்காகவும் தனது வேட்பாளர்களுக்காகவும் சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடங்கிவிட்டார். மறுபக்கம் திமுக தலைவர் ஸ்டாலினும், "ஸ்டாலின் தான் வராரு.. விடியல் தரப் போறாரு", என தமிழ்நாடு முழுவதும் பம்பரமாய் சுழன்று வருகிறார்.
இவர்கள் இருவரை தவிர மநீம தலைவர் கமல்ஹாசன், அமமுக தலைவர் டிடிவி தினகரன் என மற்ற அரசியல் தலைவர்களும் பிரசாரச் சுற்றுப் பயணத்தை துவங்கிவிட்டார்கள். இதனால் தேர்தல் களத்தின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த சூழலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலவரம் குறித்த தகவல்கள் சுடச்சுட பகிரப்பட்டு வருகின்றன.
திமுக, அதிமுகவின் கோட்டை
அதாவது, கடந்த 1977 தேர்ததில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றதில் இருந்து தற்போது வரை ஆறு முறை அதிமுக அருப்புக்கோட்டையில் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல் திமுகவும் ஐந்து முறை வெற்றி பெற்றிருக்கிறது.
சமபலமான வேட்பாளர்கள்
2021 சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் தற்போறைய சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் களம் காண்கிறார். இருவருமே சமமான பலம் பொருந்தியவர்கள் என்பதால் அருப்புக்கோட்டை தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வெற்றியைத் தீர்மானிக்கும் உமாதேவி
ஆனால் இந்தத் தேர்தலில் இவர்கள் இருவரின் வெற்றியை தீர்மானிப்பவராக சுட்டிக் காட்டப்படுகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் உமா தேவி. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய தொழில் நிறுவனமான ஜெயவிலாஸ் நூற்பாலை நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் தான் இந்த உமா தேவி.
ஊழியர்களின் விஸ்வாசம்
ஜெயவிலாஸ் நிறுவனத்தில் மட்டும் ஏறக்குறைய 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். ஊழியர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல பார்த்துக்கொள்வதால் நிறுவனத்தின் மீது அதிக விஸ்வாசம் வைத்திருக்கிறார்கள் தொழிலாளர்கள். எனவே அருப்புக்கோட்டையில் ஒரு கணிசமான வாக்குகளை உமா தேவி பிரிப்பார் என்கிறார்கள் கள நிலவரம் அறிந்தவர்கள்.
திமுகவுக்கு வேட்டு
உமாதேவி வாங்கும் ஓட்டு அனைத்துமே திமுக வேட்பாளர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரனுக்கு போகக் கூடிய ஓட்டுகள் தான். எனவே உமாதேவியால் நேரடியாகப் பாதிக்கப்பட போவது திமுக தான் என்கிறார்கள். இது அதிமுகவுக்கு தான் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
அதிமுக வேட்பாளர்
ஆனால் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வனோ களத்தில் இறங்கி பணியாற்றக் கூடியவர் அல்ல. ஒயிட் காலர் அரசியல்வாதியான வைகைச்செல்வனால் மக்களை தன் பக்கம் திருப்ப முடியுமா என்பது கேள்விக்குறியே. யார் கண்டது ரைட்டில் இண்டிகேட்டரைப் போட்டு விட்டு, லெப்ட்டில் கையைக் காட்டி விட்டு, உமாதேவியே நேரடியாக வெற்றிக் கனியைப் பறித்தாலும் அச்சர்யப்படுவதற்கில்லை.